சென்னை, மார்ச்.7 பீகார் அரசியல் சூழல் மற்றும் தமிழ்நாடு அரசியல் நிலைப்பாடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதன் விளைவுகள் குறித்து அ.தி.மு.க-விற்கு அவர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குறித்துப் பேசிய அவர், “பீகார் மக்களிடையே நிதிஷ் குமாருக்கு நல்ல மரியாதையும், அவரது கட்சிக்கு எனத் தனிப் பாரம்பரியமும் இருந்தது. ஆனால், அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த நாள் முதல், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நன்மதிப்பு படிப்படியாகச் சரிந்து கொண்டே வருகிறது,” எனத் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியைத் துறந்து, மாநிலங்களவைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. திட்டமிட்டே இத்தகைய நிலையை உருவாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து அவர் கூறியதாவது: “நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட இதே நிலை அ.தி.மு.க-விற்கும் வந்துவிடக் கூடாது என்றுதான் நான் தொடக்கம் முதலே எச்சரித்து வருகிறேன். நான் இவ்வாறு கூறியபோது அ.தி.மு.க-வினர் என்னைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், பா.ஜ.க.வின் செயல்பாடுகளை அ.தி.மு.க. விரைவில் உணர்ந்து கொள்ளும். அப்போது எனது கருத்துகளின் பின்னால் உள்ள நியாயத்தையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.” என்றார் அவர்.
