புதுடில்லி, மார்ச் 5- போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் 3.3.2026 அன்று உத்தரவிட்டது.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திசிறீ துலிபுடி பண்டிட், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை அமல்படுத்துவது, மாணவர் சங்க நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்வது மற்றும் ரோஹித் வெமுலா சட்டம் குறித்து பேசினார்.
துணைவேந்தரின் இந்தப் பேச்சுக்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், துணைவேந்தரை பதவி நீக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 27ஆம் தேதி சபர்மதி டி பாயின்ட்டில் இருந்து ஊர் வலமாக கல்வி அமைச்சகம் செல்ல முயன்றனர்.
அப்போது, காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பல காவல் துறையினர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல, மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் அதிதி மிஸ்ரா, துணைத் தலைவர் கோபிகா பாபு, முன்னாள் தலைவர் நிதிஷ் குமார் மற்றும் இணைச் செயலர் டேனிஷ் அலி உட்பட 51 பேரை கைது செய்தனர்.
மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் வரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மாஜிஸ்திரேட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் மாஜிஸ்திரேட் ரவி, “காவல் துறையினரைத் தாக்குவது கடுமையான குற்றம் என்றாலும், குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் கல்லுாரி மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்காலத்தை கருத வேண்டும்.
மேலும், இடைக்கால பிணை வழங்கிய பிறகும் சிறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஜாமின் பத்திரம் மற்றும் ஆவணங்களை சரிபார்க்க எனக்கூறி குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்க செய்ய வேண்டும்,” என, உத்தரவிட்டார்.
