


மூத்த பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலு (வயது 106) சற்று உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் அவரை சந்திக்க திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 93 வயதிலும் 3 மாடிகள் ஏறிச் சென்று வேலுவை சந்தித்து பயனாடை அணிவித்து நலம் விசாரித்தார். வேலு அவர்கள் உடனே எழுந்து நின்று தமிழர் தலைவருக்கு அன்போடு பயனாடை அணிவித்து கட்டிப் பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். தமிழர் தலைவர் அவரிடம் நீங்கள் ஏராளமான பகுத்தறிவு நாடகங்களை நடத்தி உள்ளீர்கள். அதில் நீங்கள் நடத்திய நாடகங்கள் பற்றியும், அதில் வந்த வசனங்கள் நினைவிருக்கிறதா? எனவும் கேட்டவுடன் வேலு அவர்கள் தான் நடத்திய செருப்படி மாரியம்மன் போன்ற பல்வேறு நாடகங்களில் வந்த வசனங்களை எடுத்துக் கூறியும் அதில் இடம் பெற்ற பாடல்களை பலத்த சத்தத்துடன் நாடகம் நடப்பது போலவே எடுத்து கூறியது மிகுந்த வியப்பைத் தந்தது. தமிழ்நாட்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று வந்த பழைய நினைவுகளையெல்லாம் விரிவாக எடுத்துக் கூறியது அவரது நினைவாற்றலை பறைசாற்றும் வண்ணம் இருந்தது. எந்த வயது ஆனாலும் கொள்கை உணர்வோடு இருப்பதை பார்த்து பாராட்டினார் தமிழர் தலைவர். அவரது குடும்பத்தினரிடம் வேலுவை பற்றியும், அன்றாட செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்து பாதுகாப்பாக அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். வீ.மு. வேலு அவர்களின் முதல் தலைமுறையும் அவர் வழிவந்த நான்காவது தலைமுறையும் தமிழர் தலைவரை வரவேற்றது, பாராட்டத்தக்கதாக இருந்தது. (பெங்களூரு, 28.2.2026)
