தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் TNAPExஇன் புதிய முன்னெடுப்பு. வாரந்தோறும் வர்த்தக ஆலோசனை விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் வருமான உயர்வுக்கான அரசு எடுத்திருக்கும் முக்கிய முயற்சி ஆகும்.
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx). தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தல் துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதும், வேளாண் விளைப் பொருட்கள் மற்றும் அவை சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் TNAPEX-GOT முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு
கொடுக்கும் ஆலோசனை
அறுவடை பின் ஏற்படும் வேளாண் விளைபொருள் சேதத்தை குறைப்பது, உணவு பதப்படுத்தல் மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில் கூடங்களை ஊக்குவிப்பது, வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவது போன்ற பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்த பின்னணியில், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் தங்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மற்றும் அரசு நிறுவன நிபுணர்களிடமிருந்து விளக்கம் பெறும் வகையில், ஒரு புதிய முன்னெடுப்பாக “வாரந்தோறும் வர்த்தக ஆலோசனை” என்ற தொடர்ச்சியான ஆன்லைன் ஆலோசனை நிகழ்ச்சியை TNAPEx தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் நடைபெறுகிறது.
வருமானத்தை அதிகரிப்பது எப்படி?
இந்நிகழ்ச்சியின் மூலம், விவசாய விளைப் பொருட்களை நல்ல விலையில் விற்பது எப்படி, பதப்படுத்தல் மூலம் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்கலாம், அரசு அனுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் எவை, அரசு மானியங்கள் மற்றும் உதவி திட்டங்களை எவ்வாறு பெறலாம், வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை எவ்வாறு பயன் படுத்தலாம் போன்ற முக்கிய அம்சங்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
என்னென்ன தொழில்கள் செய்யலாம்?
இந்த ஆலோசனையில், உணவு பதப்படுத்தல் துறையைப் பொறுத்த வரை, அரிசி, தானியங்கள், பழங்கள், காய் கறிகள் உள்ளிட்ட விவசாய விளைப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் முறைகள், பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான இயந்திரங்கள் குறித்த தகவல்கள், தயாரிப்பு மேம்பாடு, பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், ஏற்றுமதி மற்றும் உணவு தரச் சான்றிதழ்களான ISO 22000, HACCP, IEC, FSSAI, Organic, GI போன்ற அவசியமான சான்றிதழ்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுவதுடன், அவற்றைப் பெற தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து APEDA, DGFT போன்ற அமைப்புகளில் பதிவு செய்வது, வெளிநாட்டு சந்தை வாய்ப்புகள், அரசு மானியங்கள் மற்றும் புதிய ஏற்றுமதியாளர்களுக்கான வழிகாட்டல்கள் ஆகியவை இந்த வாராந்திர ஆலோசனை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
இந்த வாரந்தோறும் நடைபெறும் மக்கள் ஆலோசனை நிகழ்ச்சியில், விவசாயிகள், உணவு பதப்படுத்தல் தொழில் முனைவோர், MSME மற்றும் Start-up நிறுவனங்கள், FPO உறுப்பினர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.
இந்த ஆலோசனையின் மூலம், விவசாய விளைபொருட்களை நல்ல விலையில் விற்கும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, இடைத் தரகர்கள் மீது உள்ள சார்பு குறையும்; பதப்படுத்தலின் மூலம் கூடுதல் வருமானம் உருவாகும்; விளைபொருட்கள் வீணாகும் நிலை குறையும்; மேலும் அரசு அனுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் குறித்த தெளிவு கிடைக்கும்.
கூட்ட விவரங்கள்:
நாள்: ஒவ்வொரு புதன் கிழமையும் நேரம் : காலை 11.00 முதல் 12.30 வரை
முறை: ஆன்லைன் (Google Meet) அனைத்து விதமான சந்தேகங்களுக்கு: https://meet.google.com/ozx.figv.ghb
