புதுடில்லி, மார்ச் 1 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய மற்றும் தற்போதைய ஒளிப்படங்களை ஒப்பிட்டு கருத்து தெரிவித்த ஆப்பிரிக்காவின் பிரபல சமூக வலைதளப் பதிவை இந்திய அரசு தடை செய்துள்ளதாக எழுந்துள்ள புகார்,பன்னாட்டளவில் அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சர்ச்சையின் பின்னணி
சமீபத்தில் ஆப்பிரிக்க சமூகவலைதளப் பதிவு ஒன்றில் மோடி பிரதமர் ஆவதற்கு முன்பும் பின்பும் உள்ள ஒளிப்படங்களை அந்தச் சமூக வலைதளம் வெளியிட்டிருந்தது. அதில், “கருப்பாக இருப்பது உங்களுக்கு அவமானமாகத் தெரிகிறதா? இவரை நம்பவேண்டாம்” என்ற கேள்வியுடன் ஒரு பதிவு பகிரப்பட்டது. இந்தப் பதிவு இந்தியத் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்தத் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டது.
ஆப்பிரிக்க சமூக வலைதளத்தின் காரசார அறிக்கை
தங்கள் மீதான தடை குறித்து அந்தச் சமூக வலைதள நிறுவனம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“இந்திய அரசுக்குக் கருப்பு நிறத்தவர்களைப் பிடிக்காதா? உங்கள் தலைவர்களில் கருப்பு நிறம் கொண்டவர்கள் யாருமே இல்லையா? உலகம் முழுவதிலும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான இந்தியா, நிறவெறியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.”
மேலும், 24 மணி நேரத்திற்குள் தங்கள் மீதான தடையை நீக்காவிட்டால்,பன்னாட்டு அரங்குகளில் இந்தியாவின் இந்தச் செயல்பாட்டிற்கு எதிராகப் புகார் அளிக்கப் போவதாகவும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும்
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. எனினும், நிறத்தின் அடிப்படையில் ஒரு கருத்தைச் சொன்னதற்காகச் சமூக வலைதளத்தையே தடை செய்வது பேச்சுரிமைக்கு எதிரானது என ஒரு தரப்பினரும், நாட்டின் தலைவரைத் தரம் தாழ்த்தி விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
