உயிரிழப்பதற்கு முன்பு மோடிக்கு
மணிப்பூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கடிதம்
இம்பால், பிப்.25 ஆளும் கட்சியாக இருந்தும் பாதுகாப்பு, நீதி கிடைக்க வில்லை என உயிரிழப்பதற்கு முன்பு மோடிக்கு மணிப்பூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.
2023ஆம் ஆண்டு மே 4 அன்று அப்போதைய மணிப்பூர் முதலமைச்சர் என்.பைரேன் சிங் தலைமையில் நடந்த அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்எல்ஏ வுங்சா கின் வால்டே இம்பாலில் “அரம்பாய் தெங்கோல்” என்ற மெய்டெய் ஆயு தக்குழுவினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலால் அவருக்கு மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகும், அவரது உடலின் ஒரு பக்கம் செயலிழந்தது. படுக்கையிலேயே முடங்கியிருந்த அவர் பிப்., 20 அன்று அரியானாவின் குர்கானில் உயிரிழந்தார்.
இறப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்பு, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தாக்குதல் சம்பவம் மற்றும் தனது காயங்களை குறிப்பிட்டு விட்டு வுங்சாகின் வால்டே மேலும்,“பிரதமர் மோடி அவர்களே! நான் உயிருடன் இருக்கும் பிணம் போல வாழ்கிறேன். என்னைத் தாக்கியவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நியாயமான விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே, சிபிஅய் அல்லது என்அய்ஏ மூலம் உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். நான் ஆளும் கட்சியின் (பா.ஜ.க.) சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், மாநில அரசு எனக்கு உரிய பாதுகாப்பையோ அல்லது நீதி யையோ வழங்கவில்லை. குக்கி-ஜோ பழங்குடியின மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதால், அவர்களுக்கு ஒரு ‘தனி நிர்வாகம்’ அல்லது ஒரு யூனியன் பிரதேசம் வழங்கப்பட வேண்டும்” என அதில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மோடியின் மவுனம், இந்தக் கடிதம் வுங்சாகின் வால்டே இறந்த பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எனினும், இதுதொடர்பாக பிரதமர் மோடியோ, அவரது அலுவலகமோ எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால், தற்போதைய மணிப்பூர் துணை முதலமைச்சர் லோசி டிக்ஹோ பிரதமர் மோடிக்கு வால்டே அளித்துள்ள கடிதம் தொடர்பாக கூறுகையில்,“தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய அவகாசம் தேவைப்படலாம். ஆனால், நாங்கள் அனைத்துத் தடயங்களையும் பின்தொடர்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
