முட்டுக்கட்டைகளை உடைத்து வென்றவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்; மீண்டும் அவரே முதலமைச்சர்! திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதி

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 23 முட்டுக்கட்டைகளை உடைத்து வென்றவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! மீண்டும் அவரே முதலமைச்சர்! என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

தஞ்சை: திராவிட மாணவர் கழக –
இளைஞரணி மாநில மாநாடு

21.2.2026 அன்று மாலை தஞ்சையில் உள்ள திலகர் திடலில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக – இளைஞரணி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகச் சிறப்போடும்,  எதிர்பார்க்க முடியாத அளவிற்கு எழுச்சியோடும் காலையில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை அணிகளின் மாநில மாநாடும் இப்போது திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாடும் மிகச் சிறப்போடு நடைபெறுகின்றன.

தஞ்சையில், வரலாறு படைத்த
இருபெரும் மாநாடுகள்!

இன்று (21.2.2026) காலையிலும், மாலையிலும் நான்கு அமைப்புகள் மாநாடு! திராவிடர் கழகத்தில் பல அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் நான்கு அணிகளைக் குறிப்பாகத் தேர்வு செய்து, 10 நாள்களுக்கு முன்புதான் குறுகிய கால அளவில் அறிவித்தும் மிக வெற்றிகரமாக இந்த மாநாடுகள் தஞ்சையில் வரலாறு படைத்தன என்று சொல்லக்கூடிய அளவிற்கு, காலத்தால் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான மாநாடு.

இம்மாநாட்டில், கழகக் கொடியேற்றி உரையாற்றிய இளைஞரணி மாநில இணைச் செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ் அவர்களே, வரவேற்புரையாற்றிய இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், இந்த மாநாட்டின் வெற்றிக்குப் பெரிதும் உழைத்தவருமான தோழர் இரா.வெற்றிகுமார் அவர்களே,

தலைமையேற்று இருக்கக்கூடிய மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் செந்தூரபாண்டியன் அவர்களே, மாநாட்டினைத் திறந்து வைத்து உரை யாற்றிய இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி அவர்களே,

தீர்மான அரங்கத்திற்குத் தலைமையேற்ற மாணவர் கழக மாநில துணை செயலாளர் தோழர் தொண்டறம் அவர்களே, ஒருங்கிணைந்த மாணவர் கழக மாநில துணை செயலாளர் அறிவுச்சுடர் அவர்களே,

நாடாளுமன்றத்தில் இவர் எழுந்தால், எல்லோருடைய பார்வையும் இவர்மீது விழுகின்ற அளவிற்குக் கொள்கையாளர்!

இம்மாநாட்டில் சிறப்பாகக் கலந்துகொண்டு, நமக்கெல்லாம் சிறப்புரை, பேருரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், இன எதிரிகளால் கூட ஜீரணிக்க முடியாதவர் – நாடாளுமன்றத்தில் இவர் எழுந்தால், எல்லோருடைய பார்வையும் இவர்மீது விழுகின்ற அளவிற்குக் கொள்கையாளர் அன்பிற்குரிய தோழர் ஆ.இராசா அவர்களே,

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும், மேனாள் அமைச்சரும், என்றைக்கும் கொள்கையாளருமாக இருக்கக் கூடிய அன்புத் தோழர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் அவர்களே,

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்டமன்ற தி.மு.க. உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் அவர்களே,

மேனாள் அமைச்சர் என்பதைவிட,
எந்நாளும் கொள்கையாளர்!

ஒரு சிறந்த கொள்கையாளராக இருந்தால், அவர் என்றைக்கும் கொள்கைப் பார்வையோடு இருப்பார், கட்சிகளைத் தாண்டி நினைக்கக் கூடிய அளவிற்குத் துணிச்சலான முடிவெடுத்து, இங்கே சிறப்பாக திராவிடத்தினுடைய வெற்றிக்குப் பாதுகாப்பாக  அமைந்திருக்கக்கூடிய அருமை மேனாள் அமைச்சர் என்பதைவிட, எந்நாளும் கொள்கையாளர், அன்பிற்குரிய அருமைத் தோழர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களே,

இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய தஞ்சை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் முரசொலி அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் தோழர் குத்தாலம் கல்யாணம் அவர்களே,

தஞ்சை மாநகரத்தின் வணக்கத்திற்குரிய மேயர் சண்.இராமநாதன் அவர்களே,

தஞ்சை மாநகரத்தின் வணக்கத்திற்குரிய துணை மேயரும், மருத்துவருமான அஞ்சுகம் பூபதி அவர்களே,

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகரன் அவர்களே, வீ.அன்புராஜ் அவர்களே, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

இணைப்புரை வழங்கிய மாணவர் கழக இணைச் செயலாளர் நாகை.இளமாறன் அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் பிரகாஷ் அவர்களே,

தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்து, காலையிலிருந்து இடைவெளி இல்லாமல் இம்மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கக்கூடிய அருமைத் தாய்மார்களே, கொள்கை உறவுகளே, நண்பர்களே, தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, ஊடகவியலாளர்களே, செய்தியாளர் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அத்துணை பேரும், பேசும்போது இளைஞர்கள் உள்பட மிக அருமையாக விளக்கியிருக்கிறார்கள்.

தீர்மானங்கள் மிக அருமையாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் நன்றி!

நம்முடைய தஞ்சை தோழர்களிடம் நான் இந்த மாநாடுகளை நடத்தவேண்டும் என்று கேட்கவில்லை; அவர்களுக்கு செய்தியாகத்தான் சொன்னேன்.

அவர்களுடைய இசைவு நிச்சயமாகக் கிடைக்கும்; ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று! இந்தத் தஞ்சை மாநாட்டு அரங்கத்தில், மேயர் அவர்களுக்கும், துணை மேயர் அவர்களுக்கும் நாங்கள் நன்றி செலுத்திக் கொள்கிறோம்.

இன்றைக்கு
ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது!

காலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மேடையில், இந்தத் திலகர் திடலில், கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ச்சிகள் குறைவாக நடைபெறக்கூடிய  நிலையில் தான் இருந்தது. ஆனால், இன்றைக்குத்தான் இந்த அரங்கம் மிகப் பொலிவோடு இருக்கிறது. அண்ணா அரங்கம் உருவாவதற்கு நம்முடைய பழனிமாணிக்கம் அவர்கள்தான் காரணம். அண்ணா அரங்கம், இந்தத் திடல் ஆகிய இந்த இரண்டிற்கும் இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

தஞ்சை தோழர்களது சிறப்புகளுக்கு –
இந்த மாநாடுகளே உதாரணம்!

நேற்றிரவுகூட நான் இங்கே வந்து பார்த்தேன். பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. நான் இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நம்மு டைய தோழர்கள் நினைத்தால், எதையும் சாதிப்பார்கள் என்பதற்கு – தஞ்சை தோழர்களது சிறப்புகளுக்கு – இந்த மாநாடுகளே உதாரணம். எல்லோருடைய ஒருங்கிணைப்பும் இருக்கவேண்டும், அவ்வளவுதான். அந்த ஒருங்கி ணைப்பு மிகச் சிறப்பாக இங்கே கிடைத்தது.

மக்கள் வந்தார்கள், தெளிவாக மிக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரணியில் வயது இடைவெளியில்லாமல்
நடந்து வந்தார்கள்!

தாய்மார்கள் ஏராளம் வந்திருக்கிறார்கள். திராவி டர் கழக மகளிரணி மாநாடு, மகளிர்ப் பாசறை மாநில மாநாடு முடிந்தவுடன், உடனே பேரணி நடை பெற்றது. அப்பேரணியை நான் பார்வை யிட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பேரணியில் வயது இடைவெளியில்லாமல் நடந்து வந்தார்கள். வயதான வர்களும் நடந்து வந்தார்கள், சிறு குழந்தைகளும், பெரியார் பிஞ்சுகளும்கூட வந்தார்கள்.

இப்போது அறிவியல் மிக நன்றாக வளர்ந்திருக்கிறது. ஃசெல்பி எடுத்துக்கொண்டார்கள். இவை அத்தனையும் மிகச் சிறப்பு.

இந்த அரங்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு பெரிய வரலாறு உண்டு. தஞ்சை நகரத்தின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கே திராவிட இயக்க நிகழ்ச்சிகள் பல  நடைபெற்று உள்ளன.

நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாருடைய இறுதி விருப்பமாக இருந்த, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பதை, இரண்டாவது முறையாக வந்து, சட்டம் இயற்றி, அதற்கு அடித்தளம் போட்டபோது, அதைச் செய்ததற்காக அவருக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவை திராவிடர் கழகம் நடத்தியது இதே மண்ணிலே.

இறுதியில் வென்றது யார்?

அதற்கு முட்டுக்கட்டையைப் பல பேர் போட்டனர். டில்லியிலும், இங்கேயும் இருக்கின்ற உயர்ஜாதிப் பார்ப்பனர்கள், வைதீகர்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எல்லாம் முட்டுக்கட்டை போட்டனர். ஆனால், இறுதியில் வென்றது யார் என்றால், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” என்று அவர் பதவிப் பிரமாணம் எடுத்தவுடன், அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார்.

முதலில் உத்தரவுப் போட்டார் – தந்தை பெரியார் சொன்னது அப்படியே நிறைவேறியது.

‘‘என்னுடைய போராட்டங்கள் எப்போதும் தோற்காது; வேண்டுமானால், வெற்றி வருவதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகும்’’ என்று அய்யா அவர்கள் சொன்னதை நிரூபித்த மேடை இந்த மேடைதான்.

ஆகவே, இந்த மேடையில்தான், முதலில் போராட்டம் நடத்தவேண்டும் என்று தஞ்சையில் பிரகடனப்படுத்தித் தொடங்கினோம்.

 “மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான்’’ என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்!

இப்போதும் சொல்கிறேன், “மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்” என்ற தீர்மானத்தை இம்மாநாட்டில் நிறைவேற்றி இருக்கின்றோம்.

மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வரும்; காரணம், வரவேண்டியவர்கள் வந்துகொண்டி ருக்கின்றார்கள்; மேலும், மேலும் வந்து கொண்டி ருக்கிறார்கள். எதிரிகள் அதிர்ச்சியடைக் கூடிய அளவிற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள்.

வந்து கொண்டிருக்கின்ற கூட்டணி ஒன்று; சென்று கொண்டிருக்கின்ற கூட்டணி இன்னொன்று!

இன்னுங்கேட்டால், வந்து கொண்டிருக்கின்ற கூட்டணி ஒன்று; சென்று கொண்டிருக்கின்ற கூட்டணி இன்னொன்று.

வந்து கொண்டிருக்கின்ற கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்வதற்கு, சாதாரண பகுத்தறிவு போதும். அதற்குப் பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை.

“திராவிடம் வெல்லும்” என்று சொன்னோம்; அது வெறும் அலங்காரச் சொல் அல்ல. திராவிடர் கழகம் என்றைக்கும் வெறும் அலங்காரச் சொல்லைச் சொல்லாது. அர்த்தமுள்ள சொற்களைத்தான் சொல்லும்.

நேற்று பரபரப்பான செய்தி வந்தது. சட்டமன்றத்தில் மேனாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்கள் சார்பு சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றும்போது, ‘‘மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும்’’ என்று பேசினார். அதைக் கேட்டதும், சில பேருக்கு மயக்கம் வந்துவிட்டது.

அதைத் தாண்டி, ஓ.பி.எஸ். அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அய்ந்தாண்டு ஆட்சி குறித்து வாழ்த்துச் சொல்லி, “மீண்டும் தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும்” என்று சொன்னார். அதைக் கேட்டதும் நிறைய பேருக்கு அதிர்ச்சி.

அ.தி.மு.க. தோழர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, அதன் பொதுச்செயலாளர் எடுத்த முடிவு சரியில்லை என்பதற்கு அடையாளமாக ஒரே ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

எம்.ஜி.ஆர். அவர்கள், டில்லிக்குச் சென்று, ஒரு பிரச்சினை குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய கையை முறுக்கிய ஓர் அநாகரிகமானக் கூட்டம் ஆர்.எஸ்.எஸ். இந்த நிகழ்வை இல்லை என்று மறுக்க முடியாது; தோழர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் இன்றும் இருக்கிறார்; தனிக் கட்சியைக்கூட 88 வயதில் தொடங்கியிருக்கிறார். அவரே சாட்சி இதற்கு.

எம்.ஜி.ஆர். அவர்கள், முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார். அவருக்குத் தெரிகிறது மண்டைக்காடு மதக்கலவரம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். திராவிடத் தத்துவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். கொள்கை நேர் எதிரானது என்ற நிலையில், இன்றைக்கு அ.தி.மு.க. எங்கே போய்ச் சேர்ந்தி
ருக்கிறது.

திராவிடம் என்று சொன்னாலே, அதன் பெயரிலேயே வெற்றி அமைந்திருக்கிறது!

எனவே, அவர் செய்த தவறை, ஓ.பி.எஸ். செய்யவில்லை. சரியான இடத்திற்குத்தான் வந்து, பாராட்டவேண்டியவர்களைப் பாராட்டுகிறோம் என்று சொன்னார், அதனால் அதிர்ச்சியடைய வேண்டியதில்லை.

திராவிடம் என்று சொன்னாலே, அதன் பெயரிலேயே வெற்றி அமைந்திருக்கிறது. அதேபோலத்தான், தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம். திராவிடத்தை விட்டுவிட்டு, அந்தக் கட்சியைச் சொல்ல முடியாது. அதுதான் திராவிடர் கழகத்திற்கு இருக்கின்ற பெருமையாகும்.

இல்லை, இல்லை திராவிடர் கழகத்தை நாங்கள் தள்ளிவிடுகிறோம் என்று சிலர் புரியாமல் சொன்னா லும்கூட, திராவிடர் கழகத்தை விட்டுவிட்டு, கட்சியின் பெயரைச் சொல்ல முடியுமா?

இதற்குக் காரணம் என்ன?

திராவிடம் என்பது வெறும் பதவிக்காக வந்தது அல்ல. நம்முடைய சமுதாயத்தினுடைய அறிவை, வளர்ச்சியை, பாதுகாப்பை உருவாக்குவதற்காக! இதனை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, உங்களுக்குத் தெளிவாக இரண்டு, மூன்றைச் சொல்கிறேன்.

அதில் முதல் அறிவிப்பாக, அனுபவத்தில் சொல்கி றேன்.

‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலி்ன் ஆகிய நான்’’ என்று மீண்டும் அவரைப் பதவிப் பிரமாணம் எடுக்க வைப்போம்!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற விருக்கின்ற நேரத்தில், எஸ்.அய்.ஆரைக் கொண்டு வந்தாலும், நீதிமன்றங்களின்மூலம் திருவிளை யாடல்களை  நடத்தினாலும், சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை என்ற திரிசூலங்களைக் கொண்டு வந்தாலும், வெற்றி பெறப் போவது தி.மு.க. கூட்டணி தான்  –‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலி்ன் ஆகிய நான்’’ என்று மீண்டும் அவரைப் பதவிப் பிரமாணம் எடுக்க வைப்போம், தமிழ்நாட்டில். அந்த உறுதி  இருக்கிறது.

இதை யார் பதவி பிரயாணம் செய்து வைப்பார்கள் என்று சொன்னால், ஆளுநருக்கு முன்னால்தான் இதைச் செய்யவேண்டும். அதுவரை, இந்த ஆளுநர் இருந்து, அவரே பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை நாம் பார்ப்போம், பார்க்கவேண்டும்.

(தொடரும்)

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *