இடையில் ஒரே நாள்தான்!
தஞ்சை, கழகத்தின் நஞ்சை! என்றும் அது நமக்குப் புஞ்சையானதும் இல்லை! பஞ்சையானதும் இல்லை!!
நமது இயக்கக் குடும்பத்தின் தாய்மார்கள், சகோதரிகள், புறநானூற்றுத் தாய்களாகி புறப்படத் தயாராகி விட்டார்கள்!
நமது இராணுவக் கட்டுப்பாட்டின் சின்னங்களான இளைஞர்கள் அணி அணியாகப் பாடி வீடு நோக்கிப் பாசறையில் கலந்துகொள்ள படு உற்சாகக் களிப்போடும், கடமை உணர்வோடும் களம் காண, தஞ்சை மாநாடுகளுக்கு அணி அணியாய், பணி முடிக்கப் பாயும் சிங்கக் குட்டிகளாக உற்சாகப் பெருவெள்ளத்தில் நீந்தி வருகின்றன!
கொள்கைத் திட்டங்களின் கோலாகல வகுப்புகள் போன்ற உரை வீச்சுகள்!
பாருக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் நமது போராட்ட அறிவிப்பும், ‘மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியே!’ என்று சூளுரைத்து, சுயமரியாதை முழக்கமிட்டு, இலட்சிய அறப்போர் பிரகடனங்கள் போன்ற கருத்தாழம் மிக்க கவினுரைகள் காண வாருங்கள், கேட்டு மகிழுங்கள், களம் காண ஆயத்தமாகும் கருஞ்சட்டைப் பட்டாளமே!
சந்திப்போம்! சந்திப்போம்! பிப்.21 இல் தஞ்சையில் சந்திப்போம், சரித்திரம் படைப்போம்!
சரித்திரம் படைக்க அனைவரும் வாருங்கள் – வரவேற்கக் காத்திருக்கிறேன்.
உங்கள் தொண்டன், தோழன்,
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.2.2026
