சண்டிகர், பிப். 16- அரியானா மாநிலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிய பெண் அய்பிஎஸ் அதிகாரியை, பாஜக அமைச்சர் அனில் விஜ் ஒருமையில் பேசி வெளியேறச் சொன்ன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் கேய்தல் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அம்மாநில அமைச்சர் அனில் விஜ் கலந்துகொண்டார். அப்போது ஒரு மோசடி புகார் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யுமாறு அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பாளர் உபாசனாவிடம் அமைச்சர் உத்தரவிட்டார்.
அதற்குப் பதிலளித்த காவல்துறை கண்காணிப்பாளர் உபாசனா, “சம்பந்தப்பட்ட அதிகாரி குருக்ஷேத்ரா மாவட்டத்தில் பணியாற்றுவதால், அவரை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. சட்டப்படி காவல்துறை தலைமை இயக்குநருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது” என்று நிதானமாகவும், சட்ட ரீதியாகவும் விளக்கம் அளித்தார்.
பெண் அதிகாரியின் சட்ட விளக்கத்தால் ஆத்திரமடைந்த அமைச்சர் அனில் விஜ், பொதுவெளியில் அனைவர் முன்னிலையிலும் அதிகாரியை ஒருமையில் பேசத் தொடங்கினார். “உனக்கு அதிகாரம் இல்லை என்றால் இங்கிருந்து வெளியே போ” என்று கத்தியதோடு, “எனது உத்தரவு அரியானா மாநிலம் முழுவதும் செல்லும்” என்று மிரட்டும் தொனியில் ஆவேசப்பட்டார்.
இருப்பினும், அமைச்சரின் மிரட்டலுக்கு அஞ்சாத அய்பிஎஸ் அதிகாரி உபாசனா, “நான் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் படியே செயல்படுகிறேன்” என்று துணிச்சலுடன் பதிலடி கொடுத்தார்.
அமைச்சர் அனில் விஜ் பெண் அதிகாரிகளிடம் இவ்வாறு நடந்துகொள்வது இது முதல்முறையல்ல. 2015ஆம் ஆண்டு, மது விற்பனை தொடர்பான புகாரின்போது, பெண் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கீதா காலியாவை இதேபோல் ‘வெளியே போ’ என்று அமைச்சர் மிரட்டினார். அதன் விளைவாக அந்த அதிகாரி உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போதைய நிலை: 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பெண் அதிகாரியிடம் அமைச்சர் அதே பாணியில் நடந்துகொண்டது பழைய கசப்பான நினைவுகளை சமூக வலைதளங்களில் கிளறியுள்ளது.
குவியும் கண்டனங்களும், பாராட்டுகளும்!
பாஜக அரசின் பெண் பாதுகாப்பு மற்றும் “பெண் குழந்தைகளைக் காப்போம்” முழக்கங்கள் வெறும் விளம்பரம்தானா? என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு நேர்மையான அய்பிஎஸ் அதிகாரியை, மக்கள் பிரதிநிதி ஒருவர் பொது இடத்தில் இழிவுபடுத்தியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாமல் சட்டத்தின் பக்கமே நின்ற அய்பிஎஸ் அதிகாரி உபாசனாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
