புதுடில்லி, பிப். 16- நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 14.2.2026 அன்றுடன் (நிறைவடைந்த நிலையில், ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி இடையேயான அரசியல் மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு எதிராக ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீர்மான அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது கடும் அமளி ஏற்பட்டது. இதன் விளைவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
குறிப்பாக, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியைத் தாக்கத் திட்டமிட்டதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான அறிவிக்கையை வழங்கின.
இந்தச் சூழலில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்துள்ளது. இதற்கு ‘இந்தியா’ கூட்டணியின் மற்ற கட்சிகளும் கொள்கை அளவில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. மக்களவைத் தலைவருக்கு எதிரான அறிவிக்கையில் கையெழுத்திடாத திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல் ஆணையர் விவகாரத்தில் முன்னிலை வகிக்கிறது.
அதே வேளையில், மக்களவைத் தலைவர் விவகாரத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
“மக்களவைத் தலைவர் மற்றும் தேர்தல் ஆணையர் என இரு முக்கிய அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதால், வரும் மார்ச் 9ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட அமர்வில் அனல் பறக்கும் விவாதங்களும் மோதல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.”
