51-வது காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாபு சுபாஷ் சந்திரபோஸ் வித்தல் நகருக்குச் செல்லும் வழியில் ராய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் சில காங்கிரஸ்காரர் சுபாஷ் பாபுவைச் சந்தித்து ‘வந்தே மாதரம்’ விஷயமாகச் சில கேள்விகள் கேட்டார்கள்.
‘காங்கிரஸ் முஸ்லிம் லீகுக்குத் தலை குனிவானேன்? முஸ்லிம் லீக் பிற்போக்காளர் நிறைந்த ஸ்தாபனம் அல்லவா? தேசிய ஸ்தாபனமான காங்கிரஸ் வகுப்பு ஸ்தாபனமான முஸ்லிம் லீகுடன் சமரசம் செய்யலாமா?” என்றெல்லாம் ஒரு காங்கிரஸ் இளைஞர் கேட்டார்.
சுபாஷ் பாபு: ‘தலைகுனிவது என்னும் சொற்றொடருக்கு நீர் கற்பிக்கும் பொருளைத் தழுவியது இந்தப் பிரச்சினை
காங்கிரஸ் இளைஞர்: பண்டித ஜவஹர்லால் ஜனாப் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதவில்லையா?
சுபாஷ் பாபு: பதிலை எதிர்பார்க்க ஒவ்வொரு வருக்கும் உரிமையுண்டு. ஜனாப ஜின்னா மட்டும் பாபியா? அவருக்கு ஏன் கடிதம் எழுதக் கூடாது?-
காங்கிரஸ் இளைஞர்: ‘வந்தே மாதரம்’ விஷயத்தில் காங்கிரஸ் முஸ்லிம் லீகுக்கு வளைந்து கொடுக்கவில்லையா? இத்தருணத்தில் வயது முதிர்ந்த ஒருவர் வண்டிக்குள் பிரவேசித்து அதே கேள்வியைக் கேட்டார். “காங்கிரஸ்காரராகிய நாம் எப்பொழுதும் இந்தியா என்ற உணர்ச்சியுடனேயே நடந்து கொள்ள வேண்டும்.
சுபாஷ்பாபு: காங்கிரஸ் ஒரு தேசீய ஸ்தாபனமா யிருப்பதினாலே இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வகுப்பார் உணர்ச்சியைப் பரிசீலனை செய்ய வேண்டும். தேசிய கீதம் தேச மகாஜனங்களில் எல்லா வகுப்பாருக்கும் திருப்தியளிக்கக் கூடியதாயிருக்க வேண்டும்.
ஒருவர்: ஒரு காலத்திலே ‘வந்தே மாதரம்’ முஸ்லிம்களுக்குத் திருப்தியாகத்தானே இருந்தது.
சுபாஷ்பாபு: முஸலிம்கள் அபிப்பிராயத்தை முன் நிறுத்திக் கொண்டு வந்தே மாதரப் பாடலை நீங்கள் பரிசீலனை செய்ததுண்டா?
முதியவர்: தேசிய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தை ஆட்சேபிக்கவில்லையே?
சுபாஷ்பாபு: தேசீய முஸ்லிம்களை கேட்டுக் கொண்டதினாலேயே காரியக் கமிட்டியார் வந்தே மாதரப் பிரச்சினையைப் பரிசீலனை செய்து முடிவு கூறினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டிராவிட்டால் காரியக் கமிட்டியார் வந்தே மாதரத் தகராறில் தலையிட்டிருக்கவே மாட்டார்கள்.
(குடிஅரசு’ 20.2.1938)
