சென்னை, பிப்.13 ஒன்றிய அரசின் கொள்கைகளைக் கண்டித்து அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று (12.2.2026) நடைபெற்றது.
பணி புறக்கணிப்பு
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும், மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும், மின்சார திருத்தச் சட்டம் 2025, அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் ஷாந்தி – 2025 சட்டம், மற்றும் பாரம்பரிய விதைகளை அச்சுறுத்தும் விதை மசோதா – 2025 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நேற்று (12.2.2026) நடைபெற்றது. தமிழ்நாட்டில் சிஅய்டியு, ஏஅய்டியுசி, அய்என்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததால், ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் பணிக்குச் செல்லவில்லை. கிண்டி அஞ்சலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு சிஅய்டியு அகில இந்திய துணைத்தலைவர் சவுந்தரராசன் தலைமை தாங்கினார். இதில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு தழுவிய இந்தப் போராட்டத்தை 10 மத்திய சங்கங்கள், 50-க்கும் மேற்பட்ட அகில இந்திய சம்மேளனங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. இதில் நாடு முழுவதும் சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். புதிய தொகுப்பு சட்டங்களால் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு இல்லை.விவசாயிகள் போராட்டத்தின் போது பிரதமர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. இலவச மின்சாரத்தை ஒழித்து, மின் விநியோகத்தைத் தனியார்மயமாக்கவே மின்சார மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் நசுக்கிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
பல்லாயிரக்கணக்கானோர் கைது
இதேபோல் அண்ணாசாலை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விம்கோ நகரில்நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், சரக்கு ரயில்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 16,200 பேர், ரயில் மறியலில் ஈடுபட்ட 1,800 பேர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13,000 பேர், பேரணியில் கலந்து கொண்ட900 பேர் கைது செய்யப்பட்டனர்.
