சென்னை, பிப்.11 டில்லியில் ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்த நிலையில் 22ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
ராகுல்காந்தியுடன் சந்திப்பு
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்காக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கல் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய செயலாளர் சூரத் ெஹக்டே நிவேதிக் அல்வா மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
டில்லி இந்திரா பவனில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல்காந்தி கே.சி.வேணுகோபால் மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட அய்வர் குழு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் தி.மு.க. கூட்டணியில் 40க்கும் குறையாத இடங்களை காங்கிரசுக்கு பெற வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
22ஆம் தேதி பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ‘தோழமை கட்சிகளுடன் வரும் 22ஆம் தேதி முதல் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக்குழு பேச்சுவார்த்தை தொடங்கும்’ என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.இதற்காக மாவட்டச் செயலாளர்கள், நாடா ளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பகுதி, நகர, ஒன்றிய, திராவிட முன்னேற்றக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் சார்பு அணியினர் வாக்குச்சாவடி முகவர்கள் குழுவினர் என லட்சக்கணக்கானோர், கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்ற வந்துள்ளனர்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை ‘என் வாக்குசாவடி வெற்றி வாக்குச்சாவடி’ மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் வீடு வீடாக வெல்லும் தமிழ்பெண்கள் பரப்புரையை மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது. மேலும் வாக்குச்சாவடி குழுவினருக்கு நான்கு பயிற்சி மாநாடுகள் திருச்சியில் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.
தேர்தல் அறிக்கை தயாரிப்ப தற்கான குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாடு சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன் வரும் 22ஆம் தேதி முதல் தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
