புதுடில்லி, பிப். 11– இந்தியாவிலேயே அதிக வரி வருவாயைக் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளபோதிலும், அதற்குத் திருப்பிக் கிடைப்பது ஒன்றுமில்லை என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் பேசுகையில் குறிப்பிட்டார்.
2026-2027 பொது நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் (9.2.2026) நடைபெற்றது. அப்போது தி.மு.க. உறுப்பினா் பி.வில்சன் பேசிய முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்தியாவின் கடன்
2026-2027 ஒன்றிய நிதிநிலை அறிக்கையை வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கானது என்ற ஒன்றிய அரசின் கூற்று, உண்மைக்கு புறம்பானது. பெயரளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியை 10 சதவீதமாகவும், மொத்த செலவினத்தை ரூ. 53.47 லட்சம் கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை இலக்கை 4.3 சதவீதமாகவும் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் கடன் ரூ. 215 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.4 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 4.3 சதவீதமாக மட்டுமே குறையும் என்றும், ஒன்றிய அரசின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 56.1 சதவீதத்திலிருந்து 55.6 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால், என்.கே. சிங் குழுவால் இலக்கிடப்பட்ட 40 சதவீதத்துக்கு கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் குறைக்க பல தசாப்தங்கள் ஆகலாம்.
அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம் குறித்து கேப்பிடல் ஹில் (அமெரிக்க நாடாளுமன்றம்) கொண்டாடுகிறது, ஆனால் ரெய்ஸினா ஹில்லில் (டில்லி) இருந்து இன்னும் நாங்கள் விரிவாகக் கேட்டறியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவிடம் முற்றிலும் சரணடைந்திருப்பது குறித்த மிகுந்த அதிருப்தியில் உள்ளோம்.
ரயில்வே அமைச்சா் 2014-ஆம் ஆண்டு முதல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு 7.5 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால் எதார்த்தத்தில் 2014-ஆம் ஆண்டு முதல் தேசிய ரயில்வே நிதிநிலைதான் 25 மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது வெறும் 7.5 மடங்கு மட்டுமே. மிகவும் அவசியமான கோயம்புத்தூா் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. பல ஆண்டுகளாக, வரிப் பகிர்வு குறித்த ஒன்றிய அரசின் அணுகுமுறை, தமிழ்நாடு உட்பட வளா்ந்த மற்றும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் திட்டமிட்டு பாதகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு மாநிலங்களின் பங்களிப்பை பதினாறாவது நிதிக் குழு ஒப்புக்கொண்டபோதிலும், தமிழ்நாட்டின் பங்களிப்பை அது போதுமான வகையில் அங்கீகரிக்கத் தவறிவிட்டது.
ஜல் ஜீவன் திட்டத்தை எடுத்துக்கொண்டால், தமிழ்நாடு கோரிய ரூ. 3,112 கோடி இன்னும் விடுவிக்கப்படவில்லை. நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சம் தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தையைக் கூட குறிப்பிடவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதிக நிதியை, வரியாகக் கொடுத்தாலும் தமிழ்நாட்டிற்கு கிடைப்பது பூஜ்ஜியம்தான் மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் குற்றச்சாட்டு!
Leave a Comment
