புதுடில்லி, பிப். 11- மக்களவையில், தி.மு.க. பொருளாளரும் மக்களவைத் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று பேசும்போது, “சுவமித்வா ” என பெயரிடப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளில் துவக்கப்பட்ட நில அளவைத் திட்டத்தின் நவீன தொழில்நுட்பக் கூறுகளின் விவரங்கள் என்ன? இதுவரை நாடு முழுவதும் எத்தனை பேர்களுக்கு சொத்துரிமை உறுதி செய்யப்பட்டு உள்ளது? அனைத்து மாநிலங்களிலும் எப்போது முதல் இந்த திட்டம் செயலாக்கத்திற்கு வரும் என கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய பஞ்சா யத்து ராஜ் துறை அமைச் சர் ராஜீவ் ரஞ்சன் சிங் லலன் பதில் அளித்து பேசுகையில் கூறியதாவது:-
நவீன தொழில் நுட்பம் சார் “சுவமித்வா” திட்டம்
நாட்டின் கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமான நில அளவை செய்து வீட்டுரிமையாளர்களுக்கு சொத்து அட்டை களை மாநில அரசுகள் வாயிலாக வழங்கும் நோக்குடன் சுவமித்வா அதாவது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப ஊரகக் குடியிருப்புக்கள் நில அளவை த் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. டிரோன்கள் துணையுடன் வானில் இருந்து, தொடர்ந்து இயங்கும் நிரந்தர நெட்ஒர்க் வலைத்தொகுப்பு நிலையங்கள் உதவியுடன் நில அளவைகள் மேற் கொள்ளப்படுவதால், மிகத்துல்லியமாக அய்நூறுக்கு ஒன்று ( 1:500) அளவியில் சொத்துக்களின் எல்லைகள் உருவாக்கப் படும். நில அளவையின் நம்பகத்தன்மை ஊராட்சி அலுவலர்கள் உதவியுடன் மேலும் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன. அதன்பின்னர் உரிமையா ளர்களுக்கு சொத்து அட்டை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலமாக வழங்கப்படும்.
தமிழ் நாட்டில் செயல்படவில்லை
31 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் இத்திட்டம் செயல் பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை நாடுமுழுவதும் மொத்தம் 1.86 லட்சம் கிராமங்களில் 3.06 கோடி சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு, டில்லி, அசாம், ஜார்கண்ட், தெலங்கானா, சிக்கிம், கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இந்த சுவமித்வா ஊரக குடி யிருப்பு பகுதிகள் நவீன நில அளவை திட்டம் செயல்படுத்தப்பட வில்லை. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.
