முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூனில் கலந்தாய்வு

Viduthalai
1 Min Read

 சென்னை, ஏப். 17-  வருகிற ஜூன் மாதத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தனி கலந்தாய்வை நடத்த இருப்பதாக அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளில் சேருவதற்கு டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை என்று அழைக்கப்படும் ‘சீட்டா’ நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்தியது. இந்த தேர்வை 4,350 பேர் எழுதினர். இவர் களுக்கான தேர்வு முடிவும் வெளியானது. அய்.அய்.டி., என்.அய்.டி.களுக்கு இணையாக அண்ணா பல்கலைக்கழக துறைகள் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகின்றன.

இருப்பினும் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை (கவுன்சலிங்) தாமதமாக நடத்தப்படுவதால், என்.அய்.டி. மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர். இதனால் அண்ணா பல்கலைக் கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை படிப்பு களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. 

 மேலும் சுயநிதி கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்.சி.டி.இ.) அனுமதி கிடைப்பதில் தாமதமாவதால் செப்டம்பர் மாதத்துக்கு மாணவர் சேர்க்கை தள்ளிப்போகிறது. இதற்கு ஒரு தீர்வாக இந்த ஆண்டு முன் கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டு இருப்பதாகவும், அதன்படி, வருகிற ஜூன் மாதத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தனி கலந்தாய்வை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *