அகமதாபாத், பிப். 7- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த கேளிக்கை விருந்தில் வெளிநாட்டு மது வகைகள், ஹுக்கா விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த விருந்தில் கலந் துகொண்ட மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உட்பட 81 பேர் சிக்கியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது.
அங்கு வெளிநாட்டினர் மற்றும் அனுமதி பெற்றவர்கள் மது அருந்த முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நிர்வாணா கிரீன்ஸ் வீக்கெண்ட் ஹோம்ஸ் என்ற தனியார் விடு தியில் 4.2.2026 அன்று அனுமதியின்றி மது விருந்து நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு அனு மதியின்றி வெளிநாட்டு மது வகைகள், ஹுக்கா ஆகியவை விருந்தினர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த விருந்தில் கலந்துகொண்ட 81 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் 43 பேர் ஆண்கள், 38 பேர் பெண்கள். இதில் பலர் கட்டட நிறுவன அதிபர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் 25ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்துக்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்த வெளிநாட்டு மதுவகைகள், ஹுக்கா பைப்புகள், 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அகமதாபாத் சனந்த் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது விலக்கு அமலில் உள்ள மாநிலத்தில் தனியார் விடுதியில் அனுமதியின்றி மதுவகைகள் பரிமாறப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
