கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 3.2.2026 அன்று காலை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நீதிபதி அரி.பரந்தாமன் (ஓய்வு), பேராசிரியர் இராம.குருநாதன், வழக்குரைஞர் அருள்மொழி, பேராசிரியர் ய.மணிகண்டன், ஈரோடு தமிழன்பன் அவர்களின் துணைவியார் திருமதி சாந்தகுமாரி, மகன் பாப்லோ நெருடா, கவிஞர் தமிழமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் உரையை நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் கேட்டேன். அதே கணீர் குரல். நீரோடை போன்ற அதே தெளிவுரை. நாற்பது நிமிடங்கள் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை உலகம் குறித்தும் அவரது கொள்கை உறுதியைக் குறித்தும், அற்புதமாக உரையாற்றினார்.
‘விடுதலை’ மலரில் தந்தை பெரியார் அவர்கள் குறித்து கவிஞர் எழுதிய ஒருகவிதையை எடுத்து வாசித்து ஒவ்வொரு வரிக்குள்ளும் இருக்கிற நுட்பங்களை எடுத்துரைத்து தந்தை பெரியார் அவர்களின் பெரும் பணிகளை நினைவுகூர்ந்தார்.
கவிஞரின் 100 ஆவது கவிதை நூலான ‘இன்னும் சில பக்கங்கள்’ எனும் தலைப்பைக் குறிப்பிட்டு ‘இனிமேலும் வேண்டாம் துக்கங்கள்,’ என்று கவித்துவமாகக் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியவர், ‘உடலால் மறைந்த கவிஞர் இனி புகழால் வாழ்வார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாப்லோ நெருடா ஆகியோரைக் கவிஞர்களாக மட்டும் ரசிக்காமல், அவர்களைத் தன் மகன்களுக்கு பெயரிட்டதன் மூலமாக வீட்டுக்குள்ளேயே வரவழைத்து தன் அருகிலேயே வைத்துக் கொண்ட கொள்கைக்காரர்,’ என்று கூறினார்.
ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் நின்று கொண்டே பேசிய கி.வீரமணி அவர்கள் அமர்ந்து பேசியதை முதல் முதலாக அன்றுதான் கண்டேன். 93 வயதிலும் அதே தெளிவான குரல், பேச்சில் வெளிப்படும் கவித்துவம், இலக்கிய ரசனை, நகைச்சுவை உணர்வு, கொள்கை முழக்கம் என முக்கால் மணி நேர உரை, தனக்கு முன் மேடையில் பேசிய அனைவரது பேச்சையும் முழுமையாக, பொறுமையாக, கவனமாகக் கேட்ட பண்பு, கூட்டத்தில் கலந்து கொண்ட பலரையும் பெயர் குறிப்பிட்டு நினைவு கூர்ந்த திறன் ஆகியவை அவரது தலைமைப் பண்பின் வெளிப்பாடுகள்.
1000 பக்கங்கள் கொண்ட ஈரோடு தமிழன்பன் அவர்களின் முழுக் கவிதைத் தொகுதியைப் படித்து, கையோடு எடுத்து வந்து, அதில் சில பக்கங்களில் குறிப்புகளை வைத்துப் பேசிய அவரது பொறுப்புணர்வு நாம் கற்க வேண்டிய பாடம்.
நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்களுடன் உரையாடிவிட்டு விடைபெற்றார்.
அண்மையில் அவருக்கு நான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்தைக் குறிப்பிட்டு என்னை அறிமுகம் செய்ய ‘படிச்சேனே… நலமா?’ என்று நலம் விசாரித்தார் நானும் நலம் விசாரித்தேன்.
‘சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யாருக்கும் அரிது,’ எனும் அய்யன் வள்ளுவனின் இலக்கணத்திற்கு உயிருள்ள உதாரணம் அய்யா கி.வீரமணி அவர்கள்.
– திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி
