சென்னை, பிப். 4– தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாஜக அரசை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பிப்.5ஆம் தேதி (நாளை) மதியம் 2 மணியளவில் எனது தலைமையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நடைப்பயணம், கிழக்கு தாம்பரம் – பாரத மாதா தெரு, வேளச்சேரி சாலை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகிலிருந்து, மேற்கு தாம்பரம் – சண்முகம் சாலை வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதேபோன்று, பிப்.7ஆம் தேதி திருச்சியிலும், 8ஆம் தேதி திண்டுக்கல்லிலும், 9ஆம் தேதி தென்காசியிலும், 12ஆம் தேதி கோவையிலும் நடைபயணம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சருக்கு நன்றி
செல்வப்பெருந்தகை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் “சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தியின் பெயரை சூட்டவேண்டுமென்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்படி இந்திரா காந்தியின் பெயரை சூட்டி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றி” என கூறியுள்ளார்.
