சென்னை, பிப்.3 ‘‘பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் நமக்கு எதிராகச் செயல் படுவதாக நினைத்து தமிழ்நாட் டின் வளர்ச்சியை மீண்டும் படு குழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம்’’ என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்ணா நினைவு நாளை முன் னிட்டு திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது:
அண்ணா வழி அன்புவழி
அண்ணா வழி என்பது அன்பு வழி, அற வழி. சுயமரியாதைப் பாதையில் சமூக நீதி எனும் இலக்கை அடையும் வழி. அண்ணா வழியில் அயராது உழைத்தால்தான் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும். ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து இன்பத்தமிழ் மொழியைக் காக்க முடியும். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல முடியும். மாநிலத்தில் சுயாட்சியையும் மத்தியில் கூட்டாட்சியையும் நிலைநாட்ட முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அய்ம்பெரும் முழக்கங்களை நமக்கு கலைஞர் வழங்கினார்.
அண்ணாவுக்குப்பின் திமுக என்னவாகும் என்று நினைத்தவர்களுக்கு, அண்ணா வழியிலேயே தொடர்ந்து பயணிக்கும் என்பதை உணர்த்தும் வகையில், அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் கலைஞர்.
இந்த இருபெரும் தலைவர்களையும், அய்ம்பெரும் முழக்கங்களையும் நெஞ்சில் ஏந்தி திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை நான் வழி நடத்தி வருகிறேன். பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விடியல் வெளிச்சத்தைக் காண்கிறது. ஒன்றிய பாஜக அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழ்நாடு பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும், கல்வியிலும், கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை அந்த ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது. இந்தியாவிற்கே முன்னோடியான சமூக நலத்திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும் பத்தின் வளர்ச்சியிலும் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது.
எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதலமைச்சர் பொறுப்பை அனுப வித்தபடி, தமிழ்நாடுமக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை. நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், அண்ணாவின் பெயரைத்தான் உச்சரிக்க வேண்டியிருந்தது. அதுதான் திமுக எனும் பேரியக்கத்தின் கொள்கைக்கான வெற்றி.
இப்போதும் நாம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். “இந்திக்கு இடமில்லை” என்று இரு மொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அதிமுக. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அதற்கு மவுன சாட்சியாக அமைதி காக்கிறது அதிமுக.
சதியை முடியடிப்போம்
மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பாஜக அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அதிமுக. மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திமுகவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனதில் பதிந்துள்ளது. பாஜகவும், அதிமுகவும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, உடன்பிறப்புகளான உங்களால் தான் முறியடித்திட முடியும்.
அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் நானும் திராவிட முன்னேற்றக் கழக முன்னோடிகளும், தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்கிறோம். அண்ணாவின் நினைவு நாளில் அவரது படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய அய்ம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
