மெக்சிகோ, இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு நிகராக தமிழ்நாட்டின் வளர்ச்சி வலுவாக உள்ளது!
ஆய்வறிக்கையில் தகவல்!
புதுடில்லி, பிப்.1– மெக்சிகோ, இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு நிகராக விகிதாச்சாரத்தில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக ஆய்வ றிக்கை தெரிவித்துள்ளது.
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி வலுவாக உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரி வித்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.73 கோடி, தாய்லாந்தின் மக்கள் தொகை 7.17 கோடி, பெரிய அளவிலான நிர்வாகத் திறனை இது காட்டுகிறது. தமிழ்நாட்டின் நிலம் மற்றும் அடர்த்தி ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கி.மீ., கிரேக்க நாட்டின் நிலஅளவு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 990 சதுர கிமீ. தமிழ்நாட்டு மருத்துவத்துறையில் 10 ஆயிரம் பேருக்கு 19 மருத்துவர்கள், வியட்நாமில் 10 ஆயிரம் பேருக்கு 11 மருத்துவர்கள், இதிலும் தமிழ்நாடு முன்ன ணியில் உள்ளது.
பிறப்பு இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 35 ஆகவும், மெக்சிகோவில் 42 ஆகவும் உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3 ஆயிரத்து 950 டாலராகவும், பிலிப்பைன்ஸ் நாட்டில் தனி நபர் வருமானம் 3 ஆயிரத்து 985 டாலராகவும் உள்ளது. இத்தாலியில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 41 சதவீதம், ஆனால், தமிழ்நாட்டில் 41.5 சதவீதமாக உள்ளது.
பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் கூட, “சுதந்திரமாக வளர்ச்சி” என்ற புத்தகத்தில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எவ்வாறு அதிக வருமானம் கொண்ட நாடுகளை ஒத்த சமூக நிலைபாடுகளைக் கொண்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டுள்ளார். சமூக நீதி மற்றும் நிலையான முதலீடு ஆகியவை ஒரு நாட்டின் மாநிலத்திலிருந்து உலகளாவிய தரத்தை வழங்க முடியும் என்பதை இந்த ஆய்வறிக்கை மூலம் தமிழ்நாடு நிரூ பித்துள்ளது.
