பழனி, ஜன.31 தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் 52 மாத காலத்திலேயே 3,256 பகுதி நேர நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
முப்பெரும் விழா
பழனி அருகேயுள்ள வயலூரில் திமுக சார்பில் 60 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றும் விழா, 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா என முப்பெரும் விழா 29.1.2026 அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் அர. சக்கரபாணி, திமுக கொடியினை ஏற்றி வைத்தார்.
புதிய இயந்திரங்கள் கொள்முதல்
விழாவில் அமைச்சர் பேசியதாவது: “பிரிக்கப்பட்ட பகுதி நேர நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, ரூ.53 கோடி மதிப்பீட்டில் 6,800 புதிய விற்பனை முனைய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2,536 பகுதி நேர நியாய விலைக் கடைகள் மட்டுமே பிரிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியின் கடந்த 52 மாத காலத்திலேயே 3,256 கடைகள் பிரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டார்.
இந்த விழாவில் தாளையம், புஷ்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முன்னதாக கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன் வரவேற்றார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி முன்னிலை வகிக்க, சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலர் ராஜாமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
