தஞ்சை, ஜன.27- ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தார்.
அதையடுத்து 21.1.2026 அன்று தி.மு.க.வின் அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். வைத்திலிங்கம் ஒரத்த நாடு தொகுதியில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
அதிமுக ஆட்சியில் அமைச்ச ராகவும் இருந்துள்ளார். அதிமுக உட்கட்சி பூசலின் விளைவாக ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவில் வைத்திலிங்கம் இருந்தார். ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராகவே அவர் பார்க்கப்பட்டவர்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இன்னொரு கட்சியில் சேரக்கூடாது என்பதால் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய பின் தி.மு.க.வில் சேர்ந்தார். அவர் தி.மு.க.வில் சேர்ந்தது ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி என்று கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்ட ஓபிஎஸ், அவரது ஒவ்வொரு ஆதரவாளராக இழந்து வருகிறார்.அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
அதேபோல் மருது அழகுராஜ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேனாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10,000 பேர்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.
