மும்பை, ஜன. 25– பங்குச் சந்தையில் அதிக லாபம் தருவதாகக் கூறி, செல்போன் செயலி மூலம் மும்பையைச் சேர்ந்த 68 வயது தொழிலதிபரிடம் ரூ.10.98 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
வலைவிரித்த மோசடி கும்பல்
தெற்கு மும்பை சர்ச்கேட் பகுதியைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபர், பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தபோது சமூக வலைதள விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ‘மோகன் சர்மா’ என்ற பெயரில் அறிமுகமான நபர், தன்னை பங்குச் சந்தை ஆலோசகர் எனத் தெரிவித்து வாட்ஸ்அப்பில் பேசியுள்ளார்.
நம்பிக்கை ஏற்படுத்திய
‘ஸ்கிரீன்ஷாட்கள்’
‘ஸ்கிரீன்ஷாட்கள்’
“டிரேடர் டைட்டன் விஅய்பி 46” என்ற வாட்ஸ்அப் குழுவில் அந்தத் தொழிலதிபர் இணைக்கப்பட்டுள்ளார். அந்தக் குழுவில் இருந்த மற்ற நபர்கள் தங்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாகப் போலி ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்துள்ளனர்.
இதனை உண்மை என நம்பிய தொழிலதிபரை, ஒரு பிரத்யேக டிரேடிங் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு மோசடி கும்பல் வலியுறுத்தியுள்ளது.
காணாமல் போன முதலீடு
அந்தச் செயலியில் கணக்கு தொடங்கிய தொழிலதிபர், கடந்த டிசம்பர் 29, 2025 முதல் ஜனவரி 19, 2026 வரையிலான குறுகிய காலத்திற்குள் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ரூ.10.98 கோடியை அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பும் பணம் உடனடியாக அந்தச் செயலியின் ‘வேலட்டில்’ (Wallet) பதிவாவது போன்ற போலித் தோற்றத்தை மோசடி கும்பல் உருவாக்கியிருந்தது. இதனால் உண்மையாகவே வர்த்தகம் நடப்பதாக நம்பி அவர் தொடர்ந்து முதலீடு செய்துள்ளார்.
ரூ.8 கோடி அபராதம்
கேட்டு மிரட்டல்
கேட்டு மிரட்டல்
தனது முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற தொழிலதிபர் முயன்றபோது, பணத்தை எடுக்க வேண்டுமானால் கூடுதலாக ரூ.8 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து சைபர் க்ரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.
காவல் துறை விசாரணை
தொழிலதிபரின் புகாரைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
