ஓசூர், ஜன.20–- இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூரு உள்ளது. பெங்களூருக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் ஓசூர் தொழில்துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஓசூர் பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி பெங்களூருவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ராணுவ விமானங்கள் மற்றும் சோதனை விமானங்கள் பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதே வான் பரப்பில் பயணிகள் விமானத்தை அனுமதிப்பது இயலாத காரியம் என்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலையத்துக்காக ஏற்கெனவே அனுமதி கேட்டபோது இதே காரணத்தை தான் ஒன்றிய அரசு கூறியிருந்த நிலையில், இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
150 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு பெங்களூரு கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுவும் ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
