பெங்களுரு, ஜன.17 கருநாடகாவில் ஜாதி, மத ரீதியிலான ஆணவக் கொலை களைத் தடுக்கும் நோக்கில் தனிச்சட்டம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. கருநாடக மாநிலத்தில் அண்மைக்காலமாக ஜாதி, மதம் கடந்து காதல் திருமணம் செய்யும் இணையர் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக கருநாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா உள்ளிட்டோர் முதல மைச்சர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவைத் தயாரிக்கும்படி சட்ட அமைச்சகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதற்கான சட்ட மசோதா கடந்த மாதம் தயாரான நிலையில், அதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமசோதாவில் 18 வயதான பெண்ணும், 21 வயதான ஆணும் தங்களின் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை இருக்கிறது.
ஜாதி, மதம், மொழி, வர்க்கம், இனம், ஊர் ஆகியவற்றின் பெயரில் பாகுபாடு காட்டி, கவுரவத்தின் பெயரில் திருமணத்தைத் தடுப்பது, தாக்குவது அல்லது கொலை செய்வது குற்றமாகும்.
உயிருடன் இருக்கும் மகளுக்கோ அல்லது மகனுக்கோ இறுதிச்சடங்கு செய்வது, திதி கொடுப்பது போன்ற வற்றை சடங்குகள் செய்வது, மனரீதியாகத் தொல்லை கொடுப்பது, மிரட்டல் விடுப்பது மற்றும் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றவையும் இந்தச் சட்டத்தின்படி குற்றமாகும்.
தண்டனை விவரம்: ஆணவக் கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பாதுகாப்பு: காதல் இணையர்கள் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தால், 6 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இந்த மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
