மெட்ராஸ் மாகாணம் –‘தமிழ்நாடு’ என
பெயர் மாற்றிய நாள் இன்று (14.1.1969)
ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய பகுதி மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1950-இல் இந்தியா குடியரசு நாடானது. அதையடுத்து 1956-இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி கருநாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் தமிழ் மொழி பேசும் மக்கள் இருந்த பகுதி மெட்ராஸ் மாநிலமாக தொடர்ந்தது.
பின்னர் பலமுறை ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்து குரல்கள் எழுப்பட்டுள்ளன. இறுதியில் 1967-இல் அறிஞர் அண்ணா, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஜூலை 18, 1967 அன்று கொண்டு வந்தார்.
“இது நிறைவேற்றப்பட்டால் அது தமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி” என சொல்லி முதலமைச்சர் அண்ணா அப்போது கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு ஏகமனதாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அப்போதைய அவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார் அறிவித்தவுடன் முதலமைச்சர் அண்ணா, ‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’ என மூன்று முறை அறிவிக்க, அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ‘வாழ்க’ என்றனர்.
முறைப்படி பெயர் மாற்றப்பட்டு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நடைமுறைக்கு வந்த நாள் இன்று (14.1.1969).
