
(மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூரில் 06.01.2001 அன்று நடைபெற்ற தைமுதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்பதை வலியுறுத்தும் உலகப் பரிந்துரை மாநாட்டின்போது வெளியிடப்பட்ட பொங்கல் சிறப்பு மலரில் புலவர் க.ப.சாமி அவர்களுடன் நேர்காணல் தொகுப்பிலிருந்து)
1935இல் திருச்சியில் அகில தமிழர் மாநாடு என்று ஒரு மாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் இது நடைபெற்றது. அதில் கா.சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள் பி.டி இராசன். திரு.வி.க., மறைமலையடிகளார் முதலான தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நானும் அக்காலத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போரில் பங்கு பெற்றிருந்தமையால் அங்கு இருந்த சூழ்நிலையில் அம்மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில்தான் பலத்த விவாதம் நடைபெற்றது. பொங்கல் சமய விழாவா சமயமற்ற விழாவா என்று பலத்த விவாதம். அப்படி பலத்த விவாதம் செய்யும்போது. இறுதியாக மறைமலையடிகளார் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். பொங்கலைச் சமய விழா என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம்மாநாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். இது சமய சார்பு இல்லாத விழா எந்த சமயத்துக்காரன். எந்த ஜாதிக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சாத்திரம் இதற்கு இருக்கிறது? எந்தப் புராணம் இருக்கிறது? எந்த இதிகாசம் இருக்கிறது? என்று கேட்டு மிகவும் சீற்றம் அடைந்தார். எனவே எந்தப் புராணமும் இல்லாதபோது தமிழில் புறநானூற்றில் பிட்டங்கொற்றனின் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது.” இதை யார் மறுக்க முடியும்? என்றார்.
நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் தெளிவாக பதிலுரைத்தார். பெரியார் தான் இம்மாநாட்டை நடத்தினார். பொங்கல் மதச்சார்பற்ற முதன்மையான பொன்னான தமிழர் விழா என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் சொன்னதும் அனைவரும் கையொலி எழுப்பினர். இவ்வாறு பெரியார் சொன்னதும் திரு.வி.க. எழுந்து, என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்த சுயமரியாதை இயக்கத்திற்கு நான் தாயாக இருந்தேன். அவர் தந்தையாக இருந்து வளர்ந்தார், இன்று அதே சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் இந்தப் பொங்கலை சமய சார்பற்ற ஒரு தனிப்பெரும் தமிழன் விழா என்று ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழுலகமே பாராட்டுதலை செய்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அதன் பிறகுதான் மிகச் சிறந்த விழாவாக பொங்கலை அனைவரும் ஏற்கத் தொடங்கினர்.
இச்செய்தி பலருக்குத் தெரியாது. பெரியார் ஏற்றுக் கொண்ட பிறகுதான் ‘குடிஅரசு’ இதழிலும் ஏனைய திராவிடர் கழக ஏடுகளிலும் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டினை ஆதரித்து கருத்துக்கள் எழுதப்பட்டன. நான் அம்மாநாட்டில் கலந்து கொண்டேன். எனக்கு அப்பொழுது 19 வயது.
அச்சிறப்புக்குரிய மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு வருகையாளர், அறிஞர்கள்,
- கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார்.
- பேராசிரியர் கா.சுப்பிரமணியம் பிள்ளை
- தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
- திரு.வி.க.
- மறைமலையடிகளார்
- தந்தை பெரியார்
- பி.டி.இராஜன் தமிழவேள் (மாநாட்டுச் சிறப்புச் சொற்பொழிவாளர்)
இன்னும் பலரும் வந்திருந்தனர். அதைத் தவிர்த்து தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் பேசியவர் ஆற்காடு இராமசாமி முதலியார். பாவேந்தர் பாரதிதாசனும் வந்திருந்தார். ஆனால் அப்பொழுது அவர் அவ்வளவு சிறப்பு பெறவில்லை அக்கூட்டத்தில் மூன்று மணிநேரம் மிகச் சிறப்பாக தமிழனின் வீரத்தை அள்ளி வைத்து பிழிந்து எடுத்தவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆவார்.
அம்மாநாடு முதன்மையாக ஹிந்தி மொழியை எதிர்ப்பதற்குக் கூட்டப் பெற்றதுதான். அதில்தான் பொங்கலைப் பற்றிய தீர்மானம் முன்மொழிந்து வழிமொழியப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்தவர் பி.டி.இராஜன், வழிமொழிந்தவர் திரு.வி.க. அவர்கள்.
எனவே. பொங்கலுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அதுவே தமிழர்திருநாள், அது மதச்சார்பற்ற ஒரு விழா என்பதை நான் ஆணித்தரமாகக் கூறுவேன்.
