கவிஞர் கலி.பூங்குன்றன்
கொண்டாட்டம் தேவைதான்
கொள்கைவழிப் பாதையிலே!
மூடத்தனத்தை மோப்பம்
பிடிக்கவா பண்டிகைகள்!
பூமியைப் பாயாக
சுருட்டினான் என்ற
புராணக் கழிவுகளை
புசிப் பதற்கும்
பன்றிக்கும் பூமிக்கும்
பிறந்தது பிள்ளை என்ற
ஆபாசப் புழுதிகளை
அள்ளி முடிவதற்கும்
பண்டிகை என்று
பெயர் சூட்டி மகிழ்ந்தால்
பறிப் போவதோ பகுத்தறிவுதான்?
வாழ்வின் புற அம்சங்கள்
வளமாகச் சிரித்தாலும்
சீழ்பிடித்தது சிந்தனை யென்றால்
சிரிக்கத்தான் முடியுமா வாயால்?
இந்த வகையில்
சீர்தூக்கிப் பார்த்தால்
தப்பிப் பிழைப்பது
தை முதல் நாளாம்
பொங்கலன்றோ!
அதிலும் கை வைத்தது
ஆரியம்!
சங்கராந்தி என்று சொல்லி
சாஸ்திரப் புழுக்களை
நெளிய விட்டது
சங்கரக் கும்பல்!
எதிலும் விழிப்பு வேண்டும்
எம் திராவிட மக்களுக்கு!
பண்பாட்டுப் படையெடுப்பு
பாம்பின் நஞ்சினும் கொடிது!
உலகில் அறுவடை நாள்
உண்டு – கொண்டாட்டம்தான்!
நாவினிக்கப் பொங்கி வருவது
நவில்வோம் – அது பொங்கலே!
உழவுக்கு மாடுகள்
எனவே மாட்டுப் பொங்கல்!
கண்டு அளவளாவ
கை குலுக்கி மகிழ
காணும் பொங்கல்
களிப்பை ஊட்டும்!
பொங்கல் புதுப்புனலில்
நீந்தி மகிழ்வோம்!
தமிழ் மண்ணெல்லாம்
பொங்கலோ பொங்கலென்று
புதுவெள்ளம்
புரட்சி வெடித்து
ஆரியப் படையெடுப்பை
ஆணி வேரோடு வீழ்த்துவோம்!
பொங்கலோ பொங்கல்
பொங்கட்டும்
புரட்சிப் பொங்கல்!
