கொச்சி, ஜன.8 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு பின்னணியில் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட சதியை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சிறப்பு புலனாய்வு குழு அம்பலப்படுத்தி உள்ளது
கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் , இரண்டாயிரத்து பத்தொன்பதில் புனரமைப்பு பணிகள் நடந்தன. கருவறை முன்பி ருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும்போது, துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து நான்கு கிலோ தங்கம் மாயமானது தெரிய வந்தது. கருவறைக் கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது
கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திட்டமிட்ட சதி
இந்த வழக்கில், கேரள உயர்நீதி மன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கம் திருட்டில் திட்ட மிடப்பட்ட துல்லியமான சதி குறித்து அந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாக வெளி யான தகவல் : சபரிமலையில் வடந்த தங்கம் திருட்டு நன்கு திட்டமிடப்பட்ட சதி. குற்றம் சாட்டபட்டவர்கள் கருவறையில் இருந்து மீதம் உள்ள தங்கத்தையும் திருட திட்டமிட்டு இருந்தனர். துவார பாலகர் சிலைகள் , ஏழு பகுதி கதவு மற்றும் கருவறையின் தங்க முலாம் ஆகியவற்றில் இருந்து தங்கத்தை திருட சதித்திட்டம் தீட்டப்பட்டது . ஸ்மார்ட் கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய சங்கர், கதவில் இருந்து நானூற்று ஒன்பது கிராம் தங்கத்தை பிரித்தெடுத்தார். பின்னர் அந்த தங்கம் பெல்லாரியைச் சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோசடி வெளிச்சத்துக்கு வந்த பிறகு, உயர்நீதிமன்றம் தலையிட்டது. இந்தக் காலகட்டத்தில் தான் மூன்று முக்கிய குற்றவாளிகள் பெங்களூருவில் சந்தித்தனர். கைப்பேசி டவர் தரவுகளன்படி முதல் குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் போத்தி, பத்தாவது குற்றவாளியான பங்கஜ் பண்டாரி மற்றும் கோவர்தன் ஆகியோர் இரண்டாயிரத்து இருபத்து அய்ந்தாம் ஆண்டு அக்., மாதம் பெங்களூருவில் சந்தித்துப் பேசினார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டால் அல்லது அவர்கள் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூன்று பேரும் விவாதித்துள்ளனர். அவர்கள் ஆதாரங்களையும் அழிக்க முயன்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
