மும்பை, ஜன.7– 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்காக இந்தியா – ஜப்பான் நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2017 செப்டம்பர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பீட்டில் 2022 ஆம் ஆண்டுக்குள் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டம் அறிவித்து 9 ஆண்டுகாலம் ஆகியும் இன்னும் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
2027ஆம் ஆண்டுக்கு ஜவ்வாக இழுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அதுவும் சூரத் மற்றும் பிலிமோரா இடையே (குஜராத் தெற்கு) 47 கி.மீ., தூரத்துக்கு மட்டுமே 2027 இல் பயன்பாட்டுக்கு வருகிறது. 508 கி.மீ., நீளம் கொண்ட புல்லட் ரயில் மொத்ததிட்டம் முழுமையாக எப்போது பயன்பாட்டுக்கு என்பது தொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை எவ்வித விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், திட்டத்தின் செலவு 80% கூடுதலாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கிட்டத்தட்ட ரூ.1.98 லட்சம் கோடி ஆக உயரும் என ரயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான மொத்த செலவில் 81% (சுமார் ரூ. 88,000 கோடி) தொகையை ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு நிறுவனம் மிகக் குறைந்த வட்டியில் (0.1%) கடனாக வழங்குகிறது. இந்திய ரயில்வே அமைச்சகம் ரூ. 10,000 கோடி வழங்குகிறது. குஜராத் மற்றும் மகாராட்டிரா மாநில அரசுகள் தலா ரூ. 5,000 கோடி வழங்குகின்றன.
தற்போதைய சூழ்நிலையில், சூரத் மற்றும் பிலிமோரா இடையே 47 கி.மீ., தூரத்துக்காக இதுவரை (டிச., 2025) சுமார் ரூ. 85,801 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. மொத்தமுள்ள 508 கி.மீ., ரூ.1.08 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 47 கி.மீ., தூரத்துக்கு ரூ. 85,801 கோடி செலவு என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 461 கி.மீ., தூரம் உள்ள நிலையில், திட்டத்தின் செலவு 3 மடங்காக, அதாவது ரூ.2 லட்சம் கோடியை கூட தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
புல்லட் ரயில் திட்டத்தின் செலவு தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது. ஜப்பான் வழங்கிய கடன் முடிவுக்கு வரவுள்ளது. 47 கி.மீ., தூரத்துக்கு ரூ. 85,801 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பது, முறைகேடுகளுடன் நிதி சூறையாடப்படாமல் இருக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
