சென்னை, ஜன.3- தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 19ஆம் தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
தஞ்சையில் மாநாடு
“தந்தை பெரியார்- அறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.கழகத் தலைவர் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், தி.மு.கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் அய்.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் பங்கேற்பில், வருகிற 19ஆம் தேதி அன்று மாலை 4 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது.
மாவட்ட தி.மு.க. செயலாளர்/பொறுப்பாளர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கே.கலைவாணன், காடுவெட்டி தியாகராஜன், க.வைரமணி, க.அன்பழகன், வீ.ஜெகதீசன், நிவேதா முருகன், கே.கே.செல்லபாண்டியன், என்.கவுதமன், டி.பழனிவேல் அமைச்சர் பெருமக்களான கோவி.செழியன், சிவ வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா -– நாடாளுமன்ற உறுப்பினர்களான அருண்நேரு, முரசொலி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள். நிறைவாக, தஞ்சாவூர் மத்திய மாவட்டதி.மு.க. செயலாளர் துரை.சந்திர சேகரன், நன்றி கூறுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
