அ.தி.மு.க. பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு
தஞ்சை, ஜன.1-சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் சொத்து களைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, தஞ்சா வூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் சொத்துகள் மோசடி
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஷேக் சிராஜுதீன். இவரது மனைவி முகமதா பேகம் (76). சிராஜுதீனுக்குத் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை, சிராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு சிராஜுதீன் உயிரிழந்த நிலையில், அவரது சொத்துகளைத் தஞ்சாவூரைச் சேர்ந்த சிறீவித்யா சுமதி என்பவர் கவனித்து வந்துள்ளார்.
சிறீவித்யா சுமதி, தனக்கு அறிமுகமான தஞ்சாவூர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ‘கேபிள்’ செந்தில் என்கிற செந்தில்குமார் உள்ளிட்டோருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் 2017 முதல் 2022 வரை போலி ஆவணங்களைத் தயாரித்து, முகமதா பேகத்திடம் ஏமாற்றி கையெழுத்துப் பெற்றுள்ளனர்.
செங்கிப்பட்டி மற்றும் சிராஜ்பூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் இடத்தை, செந்தில்குமார் தனது உறவினர்களான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார்.
ரூ.800 கோடி சொத்துகள்
சென்னை ஆழ் வார்பேட்டை மற்றும் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சிராஜுதீனின் சொத்துகளை, தங்களுக்குத் தானமாக வழங்கியதாகப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனர். முகமதா பேகம் பெயரில் மூன்று வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கி சட்டவிரோதப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர்.
சமீபத்தில் சிராஜுதீன் வீட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்கள், 4 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முகமதா பேகம் கேட்டபோது, அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகளைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகத் தஞ்சாவூர் குற்றப்பிரிவு காவல் துறையில் டிசம்பர் 27ஆம் தேதி முகமதா பேகம் புகார் அளித்தார்.
அதன்பேரில் சிறீவித்யா சுமதி, செந்தில்குமார், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகிய 12 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
