புதுடில்லி, டிச. 30- தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில், சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மெமு (MEMU) ரயில் உட்பட 28 ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்பட உள்ளன. பயணிகளின் வசதிக்காக, 102 ரயில்களுக்கு தற்காலிக அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொல்லம் – தாம்பரம், நாகர்கோவில் – தாம்பரம், செங்கோட்டை – சென்னை எழும்பூர், எழும்பூர் – குருவாயூர், எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல், எழும்பூர் – ராமேசுவரம் மற்றும் எழும்பூர் – செங்கோட்டை தினசரி ரயில்கள் உட்பட 65 மெயில், விரைவு மற்றும் அதிவேக ரயில்களின் வேகம் ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயண நேரம் 5 நிமிடம் முதல் 85 நிமிடங்கள் வரை சேமிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
