சென்னை, டிச.26- 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
செவிலியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, மருத்துவம் –- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் முதலமைச்சர் அறிவுறுத்தல்களின்படி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் செய்யும்பொருட்டு, நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தர பணியிடங்களில் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்தகால ஆட்சியில் 2015-ஆம் ஆண்டு பணிநியமனம் பெற்ற 6,395 ஒப்பந்த செவிலியர்களில், 1,871 செவிலியர்கள் மட்டுமே 2020-ஆம் ஆண்டு வரை பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தி.மு.க. ஆட்சி பதவியேற்ற 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ½ வருடங்களில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு (2024) மட்டும் மொத்தம் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊதியத்துடன் கூடிய
மகப்பேறு விடுப்பு
மகப்பேறு விடுப்பு
தற்போது, செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. ஆயினும் மகளிர் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள இவ்வரசு, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு ஒன்றிய அரசின் மகப்பேறு சட்டம், 1961-இன் படி ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தேசிய நலவாழ்வுக் குழும் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.
கோவிட் செவிலியர்களுக்கு பணி ஆணை
கரோனா காலத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 செவிலியர்களில் பணியில் சேராத 390 பேர் நீங்கலாக, 2146 செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு, தற்போது பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 724 செவிலியர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இவ்வரசு பொறுப்பேற்றவுடன், ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக மே-2021 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வூதிய உயர்வு ஒருசில ஒப்பந்த செவிலியர்களுக்கு சில நிர்வாக காரணங்களால் பெற இயலாமல் உள்ளனர் என அறிய வருகிறது. அவர்களுக்கு விரைவில் இவ்வூதிய உயர்வுத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு மேற்கொண்ட நடவடிக்கைளின் காரணமாக ஒப்பந்த செவிலியர்கள் அரசின் முதற்கட்டமாக 1000 நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் முடிவினை ஏற்று, தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
