இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

இந்தியாவில் முதல் முறையாக ஜம்மு – காஷ்மீரின் ரியாசி பகுதியில் பூமியில் லித்தியம் புதைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த லித்தியம் மிகச் சிறந்த தரத்திலானது என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் போன்றவற்றை தயாரிக்க முக்கிய கனிமமாக லித்தியம் தேவைப்படுகிறது. லித்தியத்தை பொறுத்த வரையில் இந்தியா 100 விழுக்காடு இறக்குமதியை மட்டுமே நம்பி உள்ளது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் முதல்முறையாக லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு (ஜிஎஸ்அய்) மய்யம் ரியாசி மாவட்டம் சலால் கிராமத்தில் மாதா வைஷ்ணோ தேவி என்னும் கோயிலின் மலை அடிவாரத்தில் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு சுமார் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்த லித்தியம் மிகவும் சிறந்த தரப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். பொதுவாக சாதாரண தர லித்தியம் 200 பார்ட்ஸ் பெர் மில்லியன் என அளவிடப்படும் நிலையில், காஷ்மீரில் கண்டறியப்பட்டுள்ள லித்தியம் 500 பிபிஎம் என்ற தரத்தில் இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “தற்போது 3ஆம் கட்ட ஆய்வு மட்டுமே முடிந்திருக்கிறது. இன்னும் 2 கட்ட ஆய்வுகள் மேற் கொண்ட பிறகு லித்தியத்தை வெட்டி எடுக்கும் பணி தொடங்கப்படும்.

தற்போது உலக அளவில் லித்தியம் இருப்பில் சிலி 93 லட்சம் மெட்ரிக் டன்னுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 59 லட்சம் டன் லித்தியம் வெட்டி எடுக்கப்படும் பட்சத்தில், இந்தியா 2ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி:  TEC DIGEST – MARCH 2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *