யவத்மால், டிச.20 மகாராஷ் டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள 1,500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில், 3 மாதங்களில் 27,397 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவில் பதிவு முறையின் ‘லாகின்’ அய்டி ஹேக் செய்யப்பட்டு இந்த மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வெறும் 3 மாதங்களில் 27,397 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1,500 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மாநிலத்தின் மிகப்பெரிய பிறப்புச் சான்றிதழ் மோசடியாகக் கருதப்படுகிறது.
சிறப்பு ஆய்வு
யவத்மால் மாவட்டம் ஆர்னி தாலுகாவிலுள்ள ஷெந்துருசானி (Shendurusani) கிராம பஞ்சாயத்தில், செப்டம்பர் முதல் நவம்பர் 2025 வரையிலான காலத்தில் தாமதமான பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளைச் சரிபார்க்கும் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, அந்தச் சிறிய கிராமத்தின் மக்கள் தொகையை விட பல மடங்கு அதிகமாகப் பிறப்புப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். விசாரணை யில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் சிவில் பதிவு முறையின் (Civil Registration System – CRS) பாதுகாப்பு வளையம் தகர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
போலிப் பதிவுகள்
கிராம பஞ்சாயத்தின் ‘லாகின் அய்டி’ (Login ID) மும்பையில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, யாரோ ஒரு அதிநவீன சைபர் குற்ற கும்பல் இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி போலிப் பதிவுகளைச் செய்துள்ளது. இந்தக் கணக்கில் பதிவான 99 சதவிகிதப் பெயர்கள் மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடையது என்று பா.ஜ.க மூத்த தலைவர் கிரித் சோமையா தெரிவித்துள்ளார்.
