புதுடில்லி,டிச.13 டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங் களில் நிலவும் காற்று மாசு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (12.12.2025) இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,”நமது நாட்டின் பெரு நகரங்களில் பல காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகள் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. மக்க ளுக்கு புற்று நோய் வருகிறது. வயதான வர்கள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள். நமது நகரங்களில் காற்று மாசுவை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து அரசாங்கம் ஒரு திட்டத்தை உருவாக்குவது முக்கியம். விவாதம் தான் ஆரோக்கியம் அத்தகைய திட்டத்தை உருவாக்குவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இப்போதெல்லாம், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் உடன்படக்கூடிய பிரச்சனைகள் மிக மிகக் குறைவு. காற்று மாசு குறித்து அரசாங்கம் நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். நீங்கள் எங்களை குற்றம் சொல்வது அல்லது நாங்கள் உங்களை குற்றம் சொல்வது என்பதாக இல்லாமல், விவாதம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.
எல்லாம் தனியார் மயம் தானா?
காப்பீட்டு துறையில் நூறு விழுக்காடு முதலீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி, டிச.13 இந்தியக் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (எப்.டி.அய்.) 100 சதவீதமாக உயர்த்துவதற்கான வரைவு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று (12.12.2025) ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டுத் துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைத் துரிதப்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையிலும் காப்பீட்டுச் சட்டங்கள் மசோதா 2025 உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப் பட்டியலிடப்பட்ட 13 சட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டு பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய தலைமுறை நிதித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பைத் தற்போதுள்ள 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வேக்கு சொந்தமாக
4.99 லட்சம் ஹெக்டேர் நிலம்
ரயில்வேக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்பு பற்றிய கேள்விக்கு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில்எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 4.99 லட்சம் ஹெக்டேர் நிலம் இந்திய ரயில்வேக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1068.54 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், ரயில்வே காவல் படை (RPF)& உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
