அகமதாபாத், டிச.12 “மோடியின் குஜராத் மாடல்” ஆட்சியில், 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன!
தொழில் நிறுவனங்கள் மூடல்!
பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வருகிறது. தற்போது மோடிக்கு நெருக்கமான பூபேந்திர படேல் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், குஜராத் பாஜக அரசின் மோசமான தொழிற் கொள்கையில் உள்ள தெளிவற்ற நிலைகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 10,950 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மூடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனை குஜராத் சட்டமன்றத்தில் அம்மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் பல்வந்த் சிங் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், “கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் 2023 வரை) குஜராத்தில் மொத்தமாக 10,950 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
2018-2019 இல் 2,752 நிறுவனங்களும், 2019-2020இல் 2,873 நிறுவனங்களும், 2020-2021இல் 2,367 நிறுவனங்களும், 2021-2022 இல் 1,749 நிறுவனங்களும், 2022-2023இல் 1,209 நிறுவனங்கள் என மொத்தம் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் தொழிற் கொள்கையின் விளைவு 5 ஆண்டு களில் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது சாதாரண விஷயம் அல்ல. தொழில் நிறுவனங்கள் மூடலுக்கு முக்கியக் காரணங்களாக, கடன் சுமை அதிகரிப்பு மற்றும் அதைத் திருப்பிச் செலுத்த முடியாதது ஆகியவையே கூறப்படுகின்றன.
தொழிலாளர்கள் வேலையிழப்பு!
தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பெருமளவு மூலதனமும் முடங்கியுள்ளது. குஜராத் பாஜக அரசாங்கம் நன்கொடைக்காக கார்ப்பரேட் தொழில்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தான் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை பின்னடைவுக்குக் காரணம்.
அதே போல சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அமல்படுத்தியதன் தாக்கம், போதிய அரசு ஆதரவின்மை, சந்தைப் போட்டி மற்றும் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை சிறு தொழில்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக அரசு மழுப்பல் தொழில் துறைக்கு உதவுவதற்காகப் பல்வேறு கடன் மானியத் திட்டங்கள் மற்றும் மூலதன ஊக்க உதவிகள் வழங்கப்பட்டதாக குஜராத் பாஜக அரசு கூறினாலும், இந்த நிறுவனங்கள் மூடப்பட்டதற்குக் குறிப்பிட்ட கார ணங்களை அரசுத் தரப்பு தெளிவாக விளக்கவில்லை. எனி னும் தொழிற்கொள்கையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டி யதன் அவசியத்தை இப்புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
