புதுடில்லி, டிச. 11- நாடாளு மன்றத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத்-இ-உலாமா ஹிந்த் அமைப்பின் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
வந்தே மாதரம் பாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் அல்லாவை மட்டுமே வணங்குகிறார்கள். அல்லாவைத் தவிர வேறு யாரையும் எங்கள் வழிபாட்டில் சேர்க்க முடியாது. ‘வந்தே மாதர’த்தின் மொழிபெயர்ப்பு ஷிர்க் (பாவம்) தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
‘வந்தே மாதர’த்தின் 4 வாக்கியங்களிலும், நாடு தெய்வீகப்படுத்தப்பட்டு துர்கா தேவியுடன் ஒப்பிடப்படுகிறது. வழிபாட்டு வார்த்தைகள் பயன் படுத்தப்படுகின்றன.
‘வந்தே மாதரம்’ என்றால், ‘அம்மா நான் உன்னை வணங்குகிறேன்’ என்று பொருள். இது முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது.
இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு எதிரான முழக்கங்களையோ அல்லது பாடல்களையோ பாட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
அரசியலமைப்பு பிரிவு 25இன் கீழ் மத சுதந்திரத்தையும், பிரிவு 19இன் கீழ் கருத்து சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது.
நாட்டை நேசிப்பதற்கும் வணங்குவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முஸ்லிம்களுக்கு தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை. சுதந்திரத்துக்காக அவர்கள் செய்த தியாகங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாங்கள் ஒரே கடவுளை நம்புகிறோம். யாருக்கும் முன்பாக நாங்கள் சிரம் பணிவதில்லை.மரணம் என்பது ஏற்கத்தக்கது. ஆனால், எங்கள் இறைவனுக்கு இணையாக யாரையும் ஏற்க முடியாது.
பிரிவினைவாத சக்திகள் இஸ்லாத்துக்கு அஞ்சுகின்றன. அதை அவமதிப்பதன் மூலம் அதை அழிக்க அவர்கள் கனவு காண்கிறார்கள். இஸ்லாத்தின் போதனைகளை முழு மனதுடன் பின்பற்றுவது முஸ்லிம்களின் பொறுப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
