வாசிங்டன், டிச. 10- ‘‘இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசிக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்திய அரிசிக்கு கூடுதல் வரி
அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வேளாண் பிரதிநிதிகள் வட்ட மேசை மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.
பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்திய ட்ரம்ப், விவசாயிகளுக்கு 12 பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்தார்.
பின்னர் அமைச்சர் பெசன்ட்டை பார்த்து, ‘‘இந்தியாவுடனான வர்த்தக நடைமுறையை எனக்கு சொல்லுங்கள். வேளாண் விளைபொருட்களை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதை ஏன் அனுமதிக்கிறீர்கள். அவர்கள் வரி செலுத்த வேண்டும்.அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா வரி விலக்கு பெற்றுள்ளதா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு,‘‘இல்லை… இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம்’’ என்று பெசன்ட் பதில் அளித்தார்.
அதற்கு ட்ரம்ப் கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்குள் அரிசியை இந்தியா குவிக்க முடியும். அப்படி நடக்கிறது என்று பிறர் மூலம் அறிந்து கொண்டேன். அதை அவர்கள் செய்யக் கூடாது. இந்திய அரிசிகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும். அது ஒன்றுதான் பிரச்சினையை தீர்க்கும்’’ என்றார்.
இதுகுறித்து, ‘குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்’ (ஜிடிஆர்அய்) அமைப்பினர் நிறுவனர் அஜய் சிறீவஸ்தவா கூறியதாவது:
வர்த்தக புரிதல் எதுவும் இல்லாமல் உள்ளூர் அரசியல் காரணங்களுக்காகவே அதிபர் ட்ரம்ப் அரிசிக்கு கூடுதல் வரி விதிப்பேன் என்று கூறுவதாக தெரிகிறது. நடப்பு நிதியாண்டு 2025இல் இதுவரை 392 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசியை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இது பன்னாட்டு அளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் அளவில் 3 சதவீதம் மட்டுமே. இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதித்தாலும் அது இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதிக்காது. இந்திய அரிசிக்கு பன்னாட்டு அளவில் வலிமையான மார்க்கெட் உள்ளது. ஆனால், அமெரிக்க மக்கள்தான் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அஜய் சிறீவஸ்தவா கூறினார்.
