சென்னை, டிச. 10- பன்னாட்டு புத்தகக் காட்சி – 2026 ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
பன்னாட்டு புத்தகக் காட்சி
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னையில் 2023ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4ஆவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி – 2026 சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இலச்சினையை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று (9.12.2025) வெளியிட்டார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், பொது நூலகத் துறை இயக்குநர் ச.ஜெயந்தி, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடப்பாண்டு பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை ‘உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும்’ என்ற கொள்கையை மய்யமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் பன்னாட்டு இலக்கியப் பரிமாற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். உலகின் 100 நாடுகளின் பங்கேற்பு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுதல் போன்ற இலக்குகளை எட்டும் முயற்சியாக இந்தக் கண்காட்சி அமைகிறது.
2023இல் பன்னாட்டு புத்தகக் காட்சி 24 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த முயற்சி, 2025இல் 64 நாடுகளாக விரிவடைந்தது. தொடர்ந்து நடப்பாண்டு முதல் பொது மக்கள் பங்கேற்கும் திறந்த தளமாக மாற்றப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாடு பதிப்பாளர்கள் உலக வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் உருவாகிறது.
இதற்கிடையே 3 ஆண்டுகளில் 110 தமிழ் எழுத்தாளர்களின் 185 நூல்கள், 26 மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தைச் பன்னாட்டு அரங்கில் நிலைப்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும். வரும் ஆண்டுகளில் அதிகளவில் நாடுகள் பங்கேற்கும்போது தமிழ்நாட்டின் 2ஆம் நிலை நகரங்களில் கண்காட்சியை நடத்தவும் ஆலோசிப்போம். நடப்பாண்டில் 120-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
