வீரவணக்கம்! வீரவணக்கம்!!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்
ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 104) மறைந்தாரே!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் அவர்கள் தனது 104ஆம் வயதில் இன்று (10.12.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இளம் வயதிலேயே தந்தை பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, இறுதி மூச்சு அடங்கும் வரை கருஞ்சட்டை வீரராக அனைத்துத் தரப்பினரும் போற்றும், மதிக்கும் சுயமரியாதை வீரராக உலா வந்தவர். கழகம் நடத்தும் போராட்டங்களில் எல்லாம் முன் வரிசையில் நின்றவர். அவர் வாழ்விணையர், மறைந்த மானமிகு ஏ.டி.அங்கம்மாளும் கொள்கை வீராங்கனையாக வாழ்ந்தவர்.
குடும்பத்தவர் அனைவரையும், பேரப் பிள்ளைகள் உட்பட, கழகத்தவர்களாக கருஞ்சட்டையராகவே வளர்த்து எடுத்தவர்! கழகத்தில் மூத்தவராக நூறு வயது கடந்தவர் என்ற முறையில் பல மாநாடுகளிலும் பாராட்டப்பட்டவர். மகன் வானவில் மாவட்டக் கழகக் காப்பாளராகவும், பெயரன்கள் அறிவுச்செல்வம் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளராகவும், வா.தமிழ் பிரபாகரன் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளராகவும் உள்ளனர். பெயர்த்திகள் வா.விடிவெள்ளி, வா.அறிவுமணி, வா.வான்விழி ஆகியோர் உள்ளனர்.
கழகத்தின் மூத்த பெரியார் பெருந்தொண்டராகவும், குடும்பத்தின் மூத்த வழிகாட்டியாகவும் இருந்த கொள்கை வீரர் ஏ.வி.தங்கவேல் அவர்களின் மறைவு அவர்தம் குடும்பத்திற்கு மட்டுமல்ல; கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமைக் கழகத்தின் சார்பில், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்துவார்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.12.2025
