ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, டிச.6 ‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஒரு நிறுவனத்தின் ஏக போகத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏகபோக ஆதிக்கம்
‘இண்டிகோ’ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் பாதிப்பை சந்தித் துள்ளனர். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ஏகபோகமாக ஒரு நிறுவனத் தின் ஆதிக்கத்தில் விட்டதன் விளைவுதான் இது.
அதனால் விமானங்கள் ரத்து, தாமதம் என அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவி மக்கள் அதற்கான விலையை கொடுக்கின்றனர். நாட்டில் எந்தத் துறையாக இருந்தாலும், ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். ஒரு நிறுவனமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருக்கக்கூடாது. இதில் மேட்ச் பிக்சிங் இருக்கக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.
பதில் வேண்டும்
மேலும் இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கவும் இதற்கு சிவில் விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி விதி 180-ன் கீழ் நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதில், “இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் பயணிகள் குவிந்துள்ளனர். இந்த விஷயத்தில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இது பொதுமக்களின் அவசர பிரச்சினை. எனவே, மாநிலங்களவையில் இதுகுறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில்…
சென்னை விமான நிலையத்திலும் 4-ஆவது நாளாக நேற்று (5.12.2025) இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின் சேவை பாதிக்கப் பட்டது. வெளிநாடு மற்றும் உள் நாட்டு புறப்பாடு, வருகை என 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புறப்பாடு, வருகை என 22 விமானங்கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடு்த்து விமான நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பயணி களை சமாதானப்படுத்தினர்.
