புவனேஸ்வர், டிச.2- காதல் இணையர், தங்களது திருமணத்தை அரசியலமைப்புச் சட்டம் மீது உறுதிமொழி எடுத்து எளிமையாக நடத்தினர்.
நாட்டுப்பற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிக்காட்டுகின்றனர். அந்த வகையில் காதல் இணையர் தங்களின் நாட்டுப்பற்றை காட்டிய விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெண் விஞ்ஞானி
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரைச் சேர்ந்தவர் பிரீத்தி பன்னா (வயது 40). இவர் தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்தவர் பானு தேஜா (43), இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு அய்தராபாத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் சந்தித்தனர். பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த 28.11.2025 அன்று பெர்ஹாம்பூரில் நடைபெற்றது.
அரசியலமைப்புச் சட்டம் மீது உறுதிமொழி
பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீது மணமகனும், மணப்பெண்ணும் உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் மண்டபத்தில் மனிதநேய அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட குருதிக் கொடை முகாமில் கலந்து கொண்டு இருவரும் குருதிக் கொடை செய்தனர். மேலும் அவர்கள் திருமணத்தில் பங்கேற்றவர்களையும் குருதிக் கொடை செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து உறவினர்களும் குருதிக் கொடை செய்தனர். இதன் மூலம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.
மேலும் இதுகுறித்து பிரீத்தி பன்னா கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு மேன்மையானதாகும். அதில் உள்ள கொள்கைகளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வது அவசியம்” என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் பெர்ஹாம்பூரில் இதுபோன்று குறைந்தது 5 திருமணங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
