புதுடில்லி, நவ.25- வாக்கு மோசடிக்கு எதிராக வரும் டிசம்பர் 14-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பெருநிறைவான மக்கள் பேரணியை நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ், அரசியலமைப்பை பாதிக்கும் தற்போதைய செயல்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு தெளிவான எச்சரிக்கை சின்னமாக இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், எக்ஸ் தளத்தில் பதிவிட்டதில்,”போலி வாக்குகள் சேர்த்தல், எதிர்க்கட்சிகளுக்குச் சார்ந்த வாக்காளர்களை நீக்கல், வாக்காளர் பட்டியலில் பெருமளவு மாற்றங்கள் செய்தல் போன்ற பாஜக-தேர்தல் ஆணையத்தின் களங்கப்பட்ட செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் போராட்டமே ‘Vote Chor, Gaddi Chhod’ பேரணி,” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் பல பகுதியிலிருந்தும் கோடிக்கணக்கான மக்களின் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக நடந்த உயர்மட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் இந்தப் பேரணிக்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பேரணியில் ராகுல் காந்தி,மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், மிகப் பெரிய திரள்வை இந்த நிகழ்வு ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் ஆட்சியை விழுங்கும் சங்பரிவார்
ஸநாதன தர்மத்தை வளர்க்க ஒருங்கிணைப்பாளர் நியமனம்
பீகார் அரசு திட்டம்
பாட்னா, நவ. 25- பீகாரில் 2,499 கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன. இதன் பணிகளை மாநில மத அறக்கட்டளை கவுன்சில் (பிஎஸ்ஆர்டிசி) மேற்பார்வையிட்டு வருகிறது.
ஸநாதன தர்மத்தை வளர்க்க 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் கோயில் மற்றும் மடங்களின் தலைமை குருக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவர்.
இதுகுறித்து பிஎஸ்ஆர்டிசி தலைவர் ரன்பிர் நந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் ஸநாதன தர்மத்தை வளர்க்கவும், பரப்பவும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க பிஎஸ்ஆர்டிசி முடிவு செய்துள்ளது.
கோயில்கள் மற்றும் மடங்களின் தலைமை குருக்கள்தான் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்படுவர். அனைத்து கோயில்கள் மற்றும் மடங்களில் சத்யநாரயண கதா மற்றும் பவுர்ணமி நாளில் பகவதி பூஜா நடைபெறுவதை அவர்கள் உறுதி செய்வர்.
இந்த பூஜைகளின் முக்கியத்துவம் குறித்து பக்தர்களிடம் எடுத்துரைப்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்வர். இந்த பூஜைகளை மக்களும், தங்களது வீடுகளில் ஒவ்வொரு மாதமும் செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
சமூகப் பணிகளையும் கோயில்கள் மற்றும் மடங்கள் மேற்கொள்ள வேண்டும். நமது பண்டிகைகள், பூஜைகள் மற்றும் அவற்றின் மதிப்புகளையும், ஸநாதன தர்மத்தையும் பரப்புவது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
