சமையல் எரிவாயு விநியோகம் தாமதம்: மக்கள் அவதி

Viduthalai
1 Min Read

 சென்னை. மே 10 – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றன. உருளை தீர்ந்து போனால், ஒருங்கிணைந்த குரல் சேவை பிரிவு மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். வழக்கமாக, பதிவு செய்த ஓரிரு நாட்களுக்குள் புதிய உருளை விநியோகம் செய்யப்படும். ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சமையல் எரி வாயு உருளை விநியோகம் தாமதம் ஆவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ‘முன்பெல்லாம் உருளை காலியானால், புதிய உருளை பெற, குறைந்தது 20 நாட்கள்முதல் 1 மாதம் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு, முன்பதிவு செய்த ஓரிரு நாளிலேயே சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

மழை காலத்தில் மட்டும் உருளை வருவதற்கு சற்று தாமதம் ஆகும். மற்ற நாட்களில்எவ்வித பிரச்சினையும் இன்றி சிலிண்டர் விநியோகம் நடந்து வந்தது. இந் நிலையில், தற்போது மீண்டும் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் கழித்தே சமையல் எரிவாயு உருளை வருகிறது. இதுபற்றி கேட்டால், விநியோக ஏஜென்சிகளும் முறையாக பதில் அளிப்பது இல்லை’’ என்றனர். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது பயன்பாட்டில் உள்ள ஆயுட் காலம் முடிந்த மற்றும் துருப்பிடித்த உருளைகள் மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்ப புதிய உருளைகள் வரத்து குறைவாக உள்ளது. தாமதத்துக்கு இதுவே காரணம். இப்பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்’’ என்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *