2026 சட்டப்பேரவை தேர்தல் எஸ்.அய்.ஆர்.–அய் கண்டு தி.மு.க. அஞ்சுகிறதா? வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு எது சவால்? தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

3 Min Read

சென்னை, நவ.17 ‘‘எஸ்.அய்.ஆர். பணிகளைக் கண்டு திமுக பயப்படவில்லை. எங்களுக்கான வாக்குகள் திருடு போய்விடாமல் தடுக்கவே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம்’’ என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த  நேர்காணல் வருமாறு:

தி.மு.க.வுக்கும் – அ.தி.மு.க.வுக்குமாக மக்கள் மாறி மாறி வாக்களித்து வந்த நிலையில், த.வெ.க.வின் வருகை அவர்களைக் குழப்புவதாக நினைக்கிறீர்களா?

குழப்பம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாடு மக்கள் மிகவும் தெளிவாக வாக்க ளிக்கக்கூடியவர்கள். தேர்தலுக்குத் தேர்தல் பல்வேறு புதிய கட்சிகள் வருவதும், தேர்தல் முடிந்ததும் காணாமல் போவதும் வழக்கம். அதனால், மக்கள் எப்போதும் போல் தெளிவான முடிவையே எடுப்பார்கள்.

எஸ்.அய்.ஆரைக் கண்டு திமுக அஞ்சுவதுஏன்… தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், தகுதியான ஒரு வாக்காளரைப் பட்டியலில் இருந்து எளிதில் நீக்கிவிட முடியுமா?

நாங்கள் பயப்படவில்லை. எங்கள் வாக்குகள் களவு போய்விடக்கூடாது என்பதுதான் எங்கள் கவலை. நம் வீட்டில் உள்ள பொருள்களைப் பாதுகாக்க வீட்டைப் பூட்டி வைக்கிறோம் அல்லவா? அதுபோல்தான் இதுவும். தமிழ்நாடு மக்கள் திமுக-வுக்கு வாக்களிக்க தெளிவான முடிவோடு இருக்கிறார்கள். 2019 இல் இருந்து இது தொடர்கிறது. அந்த வாக்குகளை யாரும் திருடிவிடக் கூடாது என்பதற்காக எடுக்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் இது.

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் இருப்பதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே..?

தேர்தல் ஆணையம் அவர்கள் கையில்தானே இருக்கிறது. உச்ச நீதிமன்றம் உள்பட இந்த நாட்டுத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத் தன்மையை இழந்து, பாஜக-வின் ‘பி டீம்’ போலச் செயல்படுவதாகச் சொல்கின்றனர். உண்மையிலேயே போலி வாக்குகள் இருந்தால் அவர்கள் நீக்கட்டும். அதைத் தி.மு.க. ஒருபோதும் எதிர்க்காது. அதிகாரம் கொண்ட நிர்மலா சீதாராமன், நேரடியாகத் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்து நடவடிக்கை எடுக்கட்டும். அப்படி எடுத்தால், அவரைப் பாராட்ட நான் தயாராக இருக்கிறேன்.

த.வெ.க., நா.த.க. ஆகிய கட்சிகளுக்கு இளை ஞர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது. அவர்களை ஈர்க்க தி.மு.க. என்ன செய்யப் போகிறது?

தி.மு.க. என்பது இளைஞர்களை வைத்துத் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம் தான். கட்சியைத் தொடங்கியபோது அறிஞர் அண்ணாவிற்கு வயது 40. தொடக்கம் முதலே இளைஞர்களை ஈர்க்கும் சக்தி தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு. தற்போது துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதே வேகத்துடன் இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ‘அறிவுத் திருவிழா’கூட அதன் ஒருபகுதிதான்.

தி.மு.க. மீதும், முதலமைச்சர் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய். ஆனால், முதலமைச்சர் உள்ளிட்ட தி.மு.க.வினர் யாரும் அவரது பெயரைக்கூட உச்சரிப்பதில்லையே..?

நாங்கள் எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. தி.மு.க. ஒரு பெரிய ஆலமரம். அதன் நிழலுக்குப் பலரும் வரு வார்கள்; சிலர் அதன் மீது கல் எறிவார்கள். எல்லோருடைய விமர்சனத்துக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், நாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நேரம் இல்லாமல் போய்விடும்.

கோடநாடு கொலை – கொள்ளை வழக்கில் இருந்து இபிஎஸ்ஸைத் திமுக தான் காப்பாற்றி வருவதாக விமர்சனங்கள் வருகிறதே?

கோடநாடு வழக்கில் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. முந்தைய ஆட்சியாளர்கள், இந்த வழக்கில் பல்வேறு ஆதாரங்களை மறைத்துள்ளனர். அவற்றைச் சரிபார்த்து, குற்றவாளிகள் தப்பிவிடாதபடி  வழக்கை நடத்த வேண்டியுள்ளது.

அவசர கதியில் நடத்தி, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய நாங்கள் விரும்பவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியவரும்.

‘உடன்பிறப்பே வா’ ஒன் டு ஒன் சந்திப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் மீது தலைமை பெரிதாக நடவடிக்கை எடுப்பதில்லை என தி.மு.க.வினர் ஆதங்கப்படுகிறார்களே..?

அது உண்மையில்லை. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக நிர்வாகிகள் சொல்லும் கருத்துகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். குற்றம் பெரியதாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறு தவறுகளாக இருந்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எது சவாலாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

எஸ்.அய்.ஆர் உள்ளிட்ட எத்தனை சிரமங்கள் வந்தாலும், அதைச் சமாளிக்கும் திறமை தி.மு.க.விடம் இருக்கிறது. நாங்கள் செய்த சாதனைகள் தான் எங்கள் பலம். நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்பில் இல்லை. மக்களை முந்தைய தேர்தலில் பெற்றதைவிட, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். எனவே, திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.

– இவ்வாறு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேர்காணலில் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *