புதுடில்லி, நவ. 04- தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற தடைகோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொடிக்கம்பம்
தமிழ்நாட்டில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா சார்பில் வழக்குரைஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று (3.11.2025) விசாரித்தது. இதே விவகாரம் தொடர்புடைய மனுவை இந்த அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.
இதனிடையே, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வேறு அமர்வு தமிழ்நாடு அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, கொடிக்கம்பங்களை அகற்றாமல் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதியிடம் அளித்து உரிய அமர்வுமுன் பட்டியலிட வேண்டும் என பதிவாளருக்கு உத்தரவிட்டது.
