பெங்களூரு, நவ.3 நவம்பர் 1 கருநாடகா மாநிலம் உருவாகி 70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி நடந்த விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு அதிக மானியங்களை ஒதுக்கும் பாஜக அரசு மற்ற இந்திய மொழிகளை புறக்கணிக்கிறது.
மொழியைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியையும் ஒன்றிய அரசு வழங்கவில்லை கருநாடக அரசு தனது வருமானத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடியை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. ஆனால் அதில் ஒரு சிறிய பங்கை மட்டுமே ஒன்றிய அரசு திரும்பி தருகிறது.
இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசு, கன்னடத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. ஆங்கிலமும் ஹிந்தியும் குழந்தைகளின் திறமைகளைப் பலவீனப்படுத்தும். பள்ளிகளில் பிள்ளைகளுக்குத் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் சிந்திக்கக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது. என்று தெரிவித்தார்.
